இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது,
எங்களுக்கு மிகப்பெரிய விசா சேவைகள் உள்ளன. எங்கள் நாட்டுக்கு வந்து முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு விண்ணப்பித்த அன்றே விசா வழங்கும் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் படிக்க வரலாம். மேலும் அவர்கள் படித்து முடித்த பிறகு தங்கள் படிப்புக்கேற்ற வேலையில் சேர்ந்து எங்கள் நாட்டில் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.
இங்கிலாந்து இங்கு அதிக அளவில் வர்த்தகம் செய்ய இந்திய அரசு வர்த்தக தடைகளை தகர்க்க வேண்டும். இங்கிலாந்தில் நாங்கள் இந்திய முதலீட்டை வரவேற்பது போன்று விரைவாக வளர்ந்து வரும் பொருளாதரம் உள்ள இங்கே எங்கள் நாட்டு வங்கி மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் எளிதில் முதலீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
இங்கிலாந்தில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஜாக்குவார், லேண்ட் ரோவர் போன்றவற்றின் மீதான முதலீடுகள் வெற்றிகரமானவை. இது போன்ற முதலீடுகளை வரவேற்கிறோம். இங்கிலாந்து பொருளாதாரம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருகிறது. இந்நேரத்தில் இந்தியாவுடனான உறவு முக்கியமானது என்றார்.