2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால் கவலையில் இருக்கும் மக்கள் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு நிம்மதி அளிக்கும் அறிவிப்புகள் இருக்காதா என்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து அஸ்ஸோசேம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பார்ப்போம்.
மாதச் சம்பளம் வாங்குவோர்:
மாதச் சம்பளம் வாங்குவோர் வருமான வரி உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஹெல்த்கேர்:
மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்போர் அதிகபட்சமாக ரூ.15,000க்கு வரி விலக்கு பெற முடியும். இந்த தொகையை ரூ.15,000ல் இருந்து ரூ.50,000க உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
போக்குவரத்து:
ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் உள்ள பயணப்படியில் அதிகபட்சமாக மாதம் ரூ.800க்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. டீசல், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் இந்த தொகையை ரூ.3,000க உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீட்டு கடன்:
வீட்டு மனை மற்றும் வீடுகளின் விலை பல மடங்காக உயர்ந்துவிட்டது. வீட்டு கடன் தொகையும் அதற்கேற்ப அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2001ம் ஆண்டில் இருந்து வீட்டு கடன் மீது அதிகபட்சமாக ரூ.1,50,000க்கு மட்டுமே வரி விலக்கு பெற முடிகிறது. இந்த தொகையை ரூ.2,50,000க உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள்:
வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் சில முதலீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.