விண்டோஸ் பெயரில் சாப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.இதன்படி, இன்டர்நெட் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில், பல்வேறு பிரவுசர் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று.
ஆனால் 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ் 7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் விசாரணை செய்தது. இந்த புகார் உண்மை என நிரூபணமானதால் ரூ.4,020 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது.தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து மொத்த அபராதத் தொகை ரூ.15,840 கோடியாக அதிகரித்திருக்கிறது.