உணவுப் பொருட்களின் கடும் விலை உயர்வு, பசியால் வாடும் ஏழைகள் மற்றும் சத்தாண உணவு கிடைக்காதவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் குறைக்கிறது. மேலும் உணவின் விலை அதிகமாக இருப்பதால் குறைவான விலையில் இருக்கும் உணவை உண்ணவும் அல்லது சத்துக் குறைவான உணவுகளை உண்ணவும் மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சத்தாண உணவுகளைவிட சத்துக் குறைவான உணவின் விலை குறைவாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் குறைவான வருமானத்தைப் பெறுவதால் அவர்கள் சத்தாண உணவைவிட விலை குறைந்த உணவையே அதிகம் வாங்குகின்றனர் என்று உலக வங்கியின் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மேலாண்மைத் துறையின் துணை தலைவர் அட்டாவியானோ கானுட்டோ தெரிவித்திருக்கிறார்.
உலகின் சரி பாதி மக்கள் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா, பிரேசில், மெக்சிகோ, இந்தோனேசியா மற்றும் துருக்கி போன்ற 9 நாடுகளில் வாழ்கின்றனர். இந்த நாடுகள் மட்டும் அல்லாமல் குறைவான விலையில் கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் எல்லா நாடுகளிலும் பரவலாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை உலக அளவில் உணவின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது என்று உலக வங்கியின் ஃபுட் பிரைஸ் வாட்ச் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக அளவில் உணவின் விலை மிகவும் உச்சத்தில் இருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது அந்த விலையில் இருந்து 9 சதவீதம் அளவிற்கு விலை குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கோதுமை மற்றும் எத்தனால் ஆகியவற்றின் தேவை மற்றும் பயன்பாடு ஆகியவை வெகுவாக குறைந்திருப்பதால் தான் இந்த விலை குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதோடு உலக அளவில் ஒரு சில இடங்களில் தட்ப வெப்ப நிலையில் ஏற்பட்ட மாறுபாட்டால் தானியங்களின் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. இந்த உற்பத்தி அதிகரிப்பும் விலை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எனினும் கடந்த 2012ல் உலக அளவில் தானியங்களின் சேமிப்பு 3 சதவீதம் குறைந்திருந்தது. குறிப்பாக கோதுமையின் சேமிப்பு மிகவும் வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொடர் வறட்சி வரும் காலங்களில் உணவிற்கான தேவையை மிகவும் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதோடு மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் உணவு தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உணவின் விலை குறையுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.