சென்னை: இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்ற பரவலான நம்பிக்கை மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பணம் சம்பாதிக்க திணறுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிசின்ஸ் ஸ்டாண்டர்ட் தெரிவிக்கும் அறிக்கையின்படி ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்களின் வருமானத்தை பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆணி கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் முக்கியமான அணியாக உருவெடுத்தது. ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்த அணி கடந்த 2012, மார்ச் 31ம் தேதி வரையான நிதியாண்டில் வரியைக் கழிக்காமல் ரூ.10.4 கோடி வருமானம் ஈட்டியது. ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த அணிக்கு ரூ.11.3 கோடி இழப்பு ஏற்பட்டது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இந்த அணிக்கு 2012வது நிதியாண்டில் ரூ.9.5 கோடி இழப்பும், 2011வது நிதியாண்டில் ரூ.7.8 கோடி இழப்பும் ஏற்பட்டதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
புனே வாரியர்ஸ்
இந்த அணியை சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் 2012ம் ஆண்டுக்கான தனது நிதி அறிக்கையை இன்னும் சமர்பிக்கவில்லை. ஆனால் இந்த அணி 2012வது நிதியாண்டில் வரியைக் கழிக்காமல் ரூ.2.6 கோடியும், 2011ம் ஆண்டில் ரூ.15.9 கோடியும் வருமானம் ஈட்டியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்பூர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு சொந்தமானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த அணி 2012வது நிதியாண்டிற்கான தனது நிதியறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. எனினும் இந்த அணி 2011வது நிதியாண்டில் ரூ.7 கோடி வருமானம் ஈட்டியது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
கிங்ஸ் XI பஞ்சாப்
இந்த அணியின் உரிமையாளர்கள் பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா மற்றும் கே பி எச் ட்ரீம் கிரிக்கெட். பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கைப்படி இந்த அணிக்கு 2012வது நிதியாண்டில் ரூ.1.2 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2011வது நிதியாண்டில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.