சர்க்கரை தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதன்படி, வெளிச்சந்தையில் எவ்வளவு சர்க்கரையை விற்கலாம் என்று மத்திய அரசுதான் நிர்ணயித்து வந்தது. இருப்பினும் சர்க்கரை ஆலைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் லெவி சர்க்கரையில் 10%-த்தை மத்திய அரசுக்கு கிலோவுக்கு ரூ.20 என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க வேண்டும். அந்த சர்க்கரையைத்தான் ரேசன் கடைகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் விநியோகித்து வருகிறது. இதற்கிடையே, சர்க்கரை ஆலைகள் மீதான இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.
அமைச்சர்கள் எதிர்ப்பு
இந்நிலையில பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை தளர்த்தினால் பணவீக்கம் உயரும் என்றும் பொது வினியோக திட்டம் பாதிக்கப்படும் என்றும் மத்திய-மாநில அரசு உறவுகள் சீர்குலையும் என்றும் சில மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் சர்க்கரை ஆலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவு குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்க்கரை ஆலைகள் இனிமேல் தாங்கள் உற்பத்தி செய்யும் சர்க்கரை முழுவதையும் வெளிச்சந்தையில் விற்கலாம். ரேசன் கடைகளுக்கு வினியோகிக்க குறைந்த விலையில் மத்திய அரசுக்கு விற்க வேண்டியது இல்லை. இதனால் சர்க்கரை ஆலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும். சர்க்கரை ஆலைகள் வெளிச்சந்தையில் விற்கும் சர்க்கரையைத்தான் இனிமேல் மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும். அப்படி கொள்முதல் செய்யும் சர்க்கரையை ரேசன் கடைகளில் தற்போதைய ரூ.13.50 விலையிலேயே வழங்குவார்கள். எனவே, சர்க்கரை விலை உயராது என்றார்.