இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பலர் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ரனர். அத்தமிழர்களுக்கு 2-வது கட்டமாக ரூ.100 கோடி செலவில் 43 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க இந்திய அரசு முன்வந்தது.
யாருக்கு வீடுகள் வழங்கப்படுகிறதோ, அவர்களிடமே நேரடியாக இதற்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்ள 4 வங்கிகள் மூலமாக பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. (இலங்கை ரூபாய்) 5.5 லட்சம் வீதம் 4 தவணைகளாக இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஏற்கனவே உள்ள பழுதான வீடுகளை புதுப்பிப்பதற்கு, தலா ரூ.2½ லட்சம் வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதியன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.100 கோடி அளவுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அர்ப்பணிப்பு உணர்வுள்ள பல்வேறு பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
3-வது கட்டமாக, இந்த திட்டத்தின் கீழ் ரூ.212 கோடி செலவில் 4 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அவர்களில் பெரும்பான்மையோர், இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.25 கோடி வரை வழங்கப்படும்.4-வது கட்டமாக, இந்த திட்டத்திற்கு 2014-15-ம் ஆண்டில் ரூ.107 கோடி ஒதுக்கப்படும். ஏற்கனவே, கடந்த 2012-ம் ஆண்டில், இலங்கையின் வடக்கு மாகாணங்களில், முன்னோடித் திட்டமாக 1000 பேருக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.