தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு, கடலையூர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், நெலலை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடை.யநல்லூர், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரி பட்டிணம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடந்து வருகிறது.
இப்பகுதியில் 2500க்கும் மேற்பட்ட கையினால் தயாரிக்கும் தீ்ப்பெட்டி ஆலைகளும், 300 பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக 7 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். இத்தொழிலில் 80 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்ட பகுதிகளில் 14 மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது. அதிக நேர மின்வெட்டால் தீப்பெட்டி தொழில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்திக்கான முலப்பொருட்கள் விலையேற்றம், டீசல் விலை உயர்வு, லாரி வாடகை, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள், குடோன்கள், லாரி ஷெட்டுகளில் ரூ.5 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேங்கி உள்ளன.
இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்தியை கட்டுபடுத்தவும், கைவசம் உள்ள தீப்பெட்டி பண்டல்களை வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவும் வலியுறுத்தி ஏப் 13ம் தேதி முதல் ஏப் 22ம் தேதி வரை 10 நாள் தமிழகத்தில் அனைத்து தீப்பெட்டி ஆலைகளும் மூடி ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவெடுத்துள்ளன.