எனினும் செலவு செய்வது இனிமையாக இருக்கும். ஆனால் செலவை முறையாகத் திட்டமிடாவிட்டால், பின் செலவு அதிகரித்துவிடும். நம் கையில் மிச்சமிருக்கும் பணம், தேவையில்லாத செலவுகளைச் செய்ய நம்மை உந்திக் கொண்டே இருக்கும்.
எனவே உங்களுடைய தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப உங்கள் பொருளாதாரத்தைத் திட்டமிட வேண்டும். முதலில் உங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை சரியாக பிரித்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் பொருளாதாரத்தை இப்போதே நீங்கள் திட்டமிட்டு வந்தால், உங்களுடைய எதிர்கால இலக்குகளை நீங்கள் மிக எளிதாக அடைய முடியும். ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து, தன்னுடைய எதிர்கால இலக்குகளைத் திட்டமிட வேண்டும். மேலும் அவர் திட்டமிடும் எதிர்கால இலக்கு, அடையக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு அந்த இலக்கை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் அந்த இலக்கை அவர் அடைய உதவியாக இருக்கும்.
காலத்தின் சக்தி
முதலீடு செய்வதற்கு காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக 25 வயது நிரம்பிய அஜய் மற்றும் விஜய் ஆகிய இருவர் முதலீடு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அதாவது அஜய் தனது 25வது வயதிலிருந்து மாதம் ரூ.2,500 முதலீடு செய்து வருகிறார். அதே நேரத்தில் விஜய் தனது 35வது வயதிலிருந்து, மாதம் ரூ.5000 முதலீடு செய்கிறார். இருவருக்கும் 45 வயது நடக்கும் போது, அஜய் தனது முதலீட்டிலிருந்து 12 சதவீத வட்டியோடு சேர்த்து ரூ.22 லட்சத்தை திரும்ப பெறுவார். ஆனால் விஜய் வட்டியோடு சேர்த்து ரூ.11.09 லட்சத்தையே திரும்ப பெறுவார். எனவே வெகு சீக்கிரம் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பணவீக்கம்
எதிர்கால இலக்கை முடிவு செய்வதற்கு முன்பு பணத்தின் மதிப்பையும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஏற்பட்டால் பணத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
முதலீட்டுக்கான வாய்ப்புகள்
வெகு சீக்கிரம் முதலீடு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் குறைந்த வயதிலேயே முதலீடு செய்வதில் ஈடுபடுபவர்கள், நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்.
ஏனெனில் நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பங்குகளில் முதலீடு செய்ய தயங்குபவர்கள், பிபிஎப், இபிஎப், இஎல்எஸ்எஸ் போன்ற பாதுகாப்பான வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
முதன் முதலில் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் ஆர்ஜிஇஎஸ்எஸ்ஸை பார்த்துக் கொள்வதும் நல்லது. ஏனெனில் வருமான வரி சட்டத்தின் 80சிசிஜி பிரிவின்படி இந்த ஆர்ஜிஇஎஸ்எஸ்ஸில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சீக்கிரமே நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்கள் ஓய்வுக் காலம் நெருங்கி வந்தாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் ஓய்வுக் காலம் மிக இனிமையாக இருக்கும்.