சென்னை: புகழ் பெற்ற முதலீட்டு வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் தங்க விலை மேலும் குறையும் என்பதை உணர்ந்து தங்க முதலீட்டின் மீதான தங்களது இலக்கை குறைத்துக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வங்கி சமீபத்திய தங்க விலையேற்றத்தை ஒரு குமிழி என்று வர்ணித்துள்ளது.
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை படித்தறியுங்கள்:
டாய்ஷ் வங்கி பலவீனமான சூழ்நிலை காணப்படும் எனக் கணிக்கிறது
டாய்ஷ் வங்கி கடந்த வாரம் 2013ம் ஆண்டுக்கான தங்க விலைக் கணிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்த உலோகத்தின் மீதான வருமானம் 2000ம் ஆண்டில் காணப்பட்ட அதன் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தங்க முதலீட்டின் மீதான வருமானம் அதிகரிக்கக் காரணமாக இருந்த காரணிகளான மதிப்பிழக்கும் அமெரிக்க டாலர், குறைந்து வரும் வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் அமெரிக்கப் பங்குகள் மீதான அபாயத்திற்கான பிரீமியம் போன்றவை சென்ற வருடத்தின் இறுதி முதல் எதிர் பாதையில் பயணிக்கத் துவங்கிவிட்டன. இவ்வாறு டாய்ஷ் வங்கி ஆய்வாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
கோல்ட்மான் சாக்ஸ் வங்கியின் எதிர்மறை மனப்பான்மை
"ஐரோப்பாவின் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அமெரிக்க பொருளாதார நிலை ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் கடந்த மாதத்தில் தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இது தங்கத்தில் முதலீடு செய்யும் நம்பிக்கை குறைந்து வருவதையே காட்டுகிறது". இது கோல்ட்மான் சாக்ஸ் வங்கி நிபுணர்கள் தங்களது அறிக்கையில் கூறியது.
சொசைட்டி ஜெனரல் வங்கி "தங்கம் ஒரு குமிழிப் பிரதேசத்தில் இருக்கிறது" என்கிறது
இந்த மாதத் துவக்கத்தில் சொசைட்டி ஜெனரல் வங்கி தனது அறிக்கையில் "தங்கம் ஒரு குமிழிப் பிரதேசத்தில் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மிகப்பெரிய தங்க விலை வீழ்ச்சிக்கு வெகு முன்பாகவே இது கணிக்கப்பட்டது.
கிரெடிட் சூய்ஸ் வங்கி, தங்கம் தனது அசல் மதிப்பிற்கு மேலாகவே மதிப்பிடப்படுகிறது என்கிறது
கிரெடிட் சூய்ஸ் வங்கி இந்த மாதத் துவக்கத்தில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான தங்க விலையின் மீதான தனது பார்வையை வெளியிட்டது. "நீண்ட கால வரலாற்று தர மதிப்புப்படி தங்கம் அளவுக்கதிகமாகவே மதிப்பிடப்படுகிறது. அதன் அசல் மதிப்பும் சரி மற்ற பொருட்களோடு ஒப்பிடும்போதும் சரி தங்க விலை அதிகமாகவே மதிப்பிடப்பட்டுள்ளது" என்கிறது.