சென்னை: இந்திய ஐடி நிறுவனங்கள் 2013 ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டிற்கான தங்களது நிதி நிலை அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்த நிதி நிலை அறிக்கைகளைப் பார்க்கும் போது விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் சராசரியான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்று தெரிகிறது.
(April 22: Gold rates in major metros)
ஆனால் ஹெச்.சி.எல். மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் அபாரமான நிதி வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்று தெரிகிறது. இன்போசிஸ் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளில் மோசமான பொருளாதார வீழ்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால் 2012, டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் யாரும் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருந்தது.
இன்போசிஸ்
2013 ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் டாலர் வருமானம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கிறது. அதாவது அந்த நிறுவனத்தின் இபிஐடி மார்ஜின் 23.55 சதவீதம் மட்டுமே. ஆனால் எதிர்பார்த்தது 25 சதவீதமாகும். மேலும் இந்த நிறுவனம் 2014 ஆம் நிதியாண்டின் இலக்காக 6 முதல் 10 சதவீத வளர்ச்சியை மட்டுமே வைத்திருக்கிறது. ஆனால் நாஸ்காம் நிறுவனம் 12 முதல் 14 சதவீத வளர்ச்சியை இலக்காக வைத்திருக்கிறது.
விப்ரோ
விப்ரோ நிறுவனமும், இன்போசிஸைப் போல அபரிவிதமான பொருளாதார வளர்ச்சியைப் பெற திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே 3வது பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ, ஐடி வர்த்தகம் மூலம் வரும் 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 1,575 முதல் 1,610 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெற இலக்கு வைத்திருக்கிறது. இந்த இலக்கு மிகக் குறைவே.
டிசிஎஸ்
அதே நேரத்தில் டிசிஎஸ் ஐடி நிறுவனம் கடந்த 2013வது நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.3,596.3 கோடியை லாபமாக பெற்றுள்ளது. அதாவது அதன் பொருளாதார வளர்ச்சி 22.1 சதவீதமாகும். மேலும் 2013-2014 ஆம் நிதியாண்டிற்கு நாஸ்காம் நிர்ணயித்திருக்கும் பொருளாதார வளர்ச்சி அளவான 12-14 சதவீத வளர்ச்சியை மிக எளிதாக எட்டிவிடுவோம் என்று டிசிஎஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சிஎஒ என் சந்திரசேகரன் கூறுகையில், "கடந்த ஓராண்டாக நாங்கள் மிக வலிமையான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். குறிப்பாக எங்களின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கைக் கடந்திருக்கிறது. மேலும் வருமானம் நிலையாக இருக்கிறது. மேலும் புதிய வாய்ப்புகளைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
ஹெச்.சி.எல்.
கடந்த சில காலாண்டுகளாக ஐடி துறையில் ஹெச்.சி.எல். நிறுவனம் சூப்பார் ஸ்டாராக இருந்து வருகிறது. 2013 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.1,040 கோடி லாபத்தைப் பெற்றிருந்தது. இந்த லாப விகிதம் பொருளாதரா வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிகமாகும்.
அதாவது பொருளாதார நிபுணர்கள் இந்த நிறுவனத்தின் லாபாம் ரூ.950 கோடியாக இருக்கும் என்று கணித்தனர். ஆனால் அவர்களின் கணிப்பை மிக எளிதாக ஹெச்.சி.எல். வீழ்த்திவிட்டது. இந்த நிறுவனத்தின் மார்ஜின் அளவு, அந்த நிறுவனம் பெற்றிருக்கும் புதிய வாடிக்கையாளர்கள் போன்றவற்றின் மூலம் வரும் காலாண்டுகளில் இன்னும் அதிகமான லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கலாம்.