சென்னை: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் வட அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு மேலும் சில சீர்திருத்தங்கள் செய்யப்படும் என உறுதியளித்தார். மத்திய அரசு நிலக்கரி ஊழலில் சிக்கித் தவிக்கும் இந்நேரத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கேற்ற இந்த உறுதிமொழிகளை ப.சிதம்பரம் நிறைவேற்றுவது கடினம் என்றே தோன்றுகிறது! இது ஏனென்று சற்று கவனமாக பார்ப்போமா?
காப்பீட்டு மசோதா
ஏப்ரல் மாத துவக்கத்தில் ப.சிதம்பரம் காப்பீட்டு (Insurance) துறையில் அந்நிய முதலீட்டின் அளவு 49 சதவிகிதத்திற்கு உயர்தப்படும் என்ற தீர்மானத்தைக் கொண்ட காப்பீட்டு திருத்த மசோதா(Insurance Amendment Bill) நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். நாடாளுமன்றமே சரியாக செயல் படாமலிருக்கும் வேளையில் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இப்படிப்பட்ட கருத்தினை அவர் ஏன் வெளியிட்டார் என்று தெளிவாக தெரியவில்லை. அதனால், இந்த மசோதா குளிர்கால கூட்டத் தொடரில் கூட நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதுவும், அதுவரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் நிலைத்திருப்பதைப் பொறுத்தே...
ஓய்வூதிய மசோதா
'ஒரே ஒரு பிரிவில் மட்டுமே வேறுபாடு இருப்பதாக கருதப்படும் காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும் என்று மிகவும் ஆணித்தரமாக எதிர்பார்க்கிறேன், அதன் பின்னர் ஓய்வூதியம் தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்படும்' என்று ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். நாடாளுமன்றம் சரியாக நடைபெறாத காரணத்தால் காப்பீட்டு மசோதா நிறைவேற்ற முடியாமலிருப்பதைப் போலவே ஓய்வூதிய மசோதாவும் அதே காரணத்திற்காக நிறைவேறாமல் இருக்கும் நிலையே உள்ளது. இந்த செயல்பாடுகளின் அடிப்படையில், காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கப்படுவது தற்பொழுது சாத்தியமன்று என்று சொல்லலாம்.
பொருட்கள் மற்றும் சேவை வரிகள்
குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக கருதப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மிகவும் அவசரமாக தேவைப்படும் வரி சீர்திருத்தங்களில் ஒன்றாகும். ப.சிதம்பரம் மாநில முதல்வர்களுடன் கூட வருமான பங்கீடுகள் பற்றி கலந்தாலோசித்து தன்னால் இயன்ற உச்சபட்ச பணிகளை செய்திருந்த போதும், பிற மசோதாக்களைப் போலவே இந்த மசோதாவும் வெளிச்சத்திற்கு வராமலேயே இருக்கிறது. இதில் சில மாநில முதல்வர்கள் வருமான பங்கீடுகளில் திருப்தி இல்லாமலும் உள்ளனர். ஆனால் இதற்காக சிதம்பரத்தை நாம் குறை கூற முடியாது.
நில சீர்திருத்த மசோதா
நில சீர்திருத்த மசோதாவில் ஆளும் கட்சி அரசு, பிற கட்சிகளின் சம்மதத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால் நாடாளுமன்றம் செயல்படாமலிருக்கும் போது சட்டத்தை உருவாக்குபவர்கள் எப்படி அதற்கு அனுமதி அளிக்க முடியும்?. இந்த நில சீர்திருத்த சட்டம் நிலங்களை வாங்கும் வழிமுறைகளை எளிதாக மாற்றியுள்ளது மற்றும் கையகப்படுத்தும் நிலங்களுக்கு நியாயமான விலையையும் நிர்ணயிக்க வகை செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் தொழில்மயமாக்கத்திற்கும் உதவும் வகையில் உள்ளது.
ப.சிதம்பரத்திற்கு நாம் கடன் பட்டுள்ளோம்!
மேற்கண்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்காக நாம் ப.சிதம்பரத்தை குறை கூற முடியாது. உண்மையில், இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நாம் அவருக்கு கடன் பட்டுள்ளோம். ஆனால், அவர் சார்ந்துள்ள அரசாங்கம் கழுத்து வரையிலும் ஊழல் புகர்களால் குற்றம் சாட்டப்பட்டு, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் உரக்க ஒலிக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், நாடாளுமன்றம் மீண்டும் அமைதியாக கூடி இந்த மசோதாக்களை நிறைவேற்றும் என உறுதியாக சொல்ல முடியாது. அதுவரை சீர்திருத்தங்கள் வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.