சென்னை: 2013வது நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான நிதியறிக்கையை ஒரு சில இந்திய நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன. அந்த நிதியறிக்கையப் பார்த்தால் இந்தியாவில் அதிகமான அளவில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் மாருதி கார் நிறுவனம் அதிகமான லாபத்தைப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது.
(Gold prices on May 2 across Indian cities)
ஆனால் இன்போசிஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வருமானத்தை ஈட்டவில்லை என்று தெரிகிறது. இன்போசிஸ் நிறுவனத்தைப் போலவே விப்ரோ நிறுவனமும் குறைந்த வளர்ச்சி புள்ளிகளையே பெற்றுள்ளது. ஆனால் ஹெச்.சி.எல் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சி புள்ளிகளைப் பெற்றுள்ளன. அதுபோல் பல தனியார் வங்கிகளும் எதிர்பார்த்ததைவிட அதிகமான வளர்ச்சிப் புள்ளிகளைப் பெற்றுள்ளன.
ஹெச்.டி.எப்.சி. வங்கி
குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கி கடந்த காலாண்டில் 30 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அதன் மூலம் சந்தை எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவு செய்திருக்கிறது. இந்தியாவின் 2வது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி கடந்த காலாண்டில் மட்டும் ரூ.1889 கோடி லாபத்தை ஈட்டி இருக்கிறது.
இன்டஸ்இன்ட் வங்கி:
தனியார் வங்கியான இன்டஸ்இன்ட் வங்கியும் கடந்த காலாண்டில் அதிகமான லாபத்தை ஈட்டி இருக்கிறது. அதாவது அந்த வங்கி 38 சதவீத லாபத்தை ஈட்டி, முதலீட்டாளர்களையும் மற்றும் ஆய்வாளர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. மேலும் இந்த வங்கியின் மார்ஜினும் அதிகமாக இருக்கிறது.
ஐடிபிஐ, விஜயா வங்கி
தேசிய வங்கிகளின் காலாண்டு நிதியறிக்கையை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர். இதுவரை ஐடிபிஐ வங்கி மற்றும் விஜயா வங்கி போன்ற வங்கிகள் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு நிதியறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.
விஜயா வங்கி எதிர்பார்த்த புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அதனால் இந்த வங்கியின் நிதியறிக்கை வெளியிட்ட பிறகு அதன் பங்குகளின் விலையும் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஐடிபிஐ வங்கி தான் எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றிருக்கிறது. மற்ற முக்கிய தேசிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பரோடா வங்கி போன்றவை தங்கள் நிதியறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.
இந்துஸ்தான் யூனிலீவர், எல் அன்ட் டி
அதுபோல் எப்எம்சிஜி இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் நிதியறிக்கையும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இந்த வாரத்திற்குள் இந்த நிறுவனத்தின் நிதியறிக்கை வெளியிடப்படும் என்று நம்பலாம். அதுபோல் லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் நிதியறிக்கையையும் முதலீட்டாளர்கள் மிக ஆவலுடன் எதிர்பாரத்துக் கொண்டிருக்கின்றனர்.