வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை தங்க நாணயங்கள், தங்கம் தொடர்பான முதலீட்டு பொருட்கள் மற்றும் இதர சொத்து மேலாண்மை திட்டங்கள் வாங்குவதற்கு தூண்டுகிறார்கள் என்கிற புகாரின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி, இந்த 30 வங்கிகளின் வியாபார நடைமுறைகளை பற்றி ஆராய்கிறது. இந்த விசாரணையின் மூலம், இந்த வங்கிகள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கம் தொடர்பான முதலீட்டு பொருட்களின் விற்பனையை விதிமுறையை மீறி மேற்கொண்டனவா? என்றும், வங்கிகள் தங்களுடைய வழக்கமான வங்கி சேவைகளை வழங்குவதற்கு முன் நிபந்தனையாக இந்த விற்பனையை மேற்கொண்டனவா? என்றும் ஆராயப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கி ஊழியர்கள் ஊக்கத் தொகை பெற தங்க நாணயங்கள் மற்றும் தங்கம் தொடர்பான பொருட்களை விற்க அவர்களின் மூத்த அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டார்களா? எனவும் ரிசர்வ் வங்கி விசாரித்து வருகின்றது.
முன்னதாக கடந்த மாதம் ரிசர்வ் வங்கி மூன்று தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வங்கிகள் பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் வங்கிகளின் விதிமுறைகளை மீறி மோசடியில் ஈடுபட்டதாக செய்தி ஊடகம் ஒன்று தனது ரகசிய நடவடிக்கையின் மூலம் அம்பலப்படுத்தியது. அதன் பிறகே ரிசர்வ் வங்கி இந்த விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையுடன் இணைத்து தங்க நாணயங்கள், தங்கம் தொடர்பான முதலீட்டு பொருட்கள் மற்றும் இதர சொத்து மேலாண்மை திட்டங்களின் விற்பனையில் ஏதேனும் குறைபாடுகள் மற்றும் விதி மீறல்கள் உள்ளனவா? என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தங்கம் சார்ந்த முதலீட்டு பொருட்களின் விற்பனையின் போது ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் உள்ளனவா?' என்று ரிசர்வ் வங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு சுமார் 30 வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
முன்னதாக வங்கிகளில் தங்க நாணயம் விற்க ரிசர்வ் வங்கி தடை விதிக்கப் போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரபர்தி கூறுகையில், ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கை வங்கி கிளைகளில் தங்க நாணயங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீடு புராடக்டகள் விற்பனை செய்வதை தீவிரமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டியுள்ளது என்றார்.
அதிக மதிப்பு உடைய தங்க விற்பனையின்போது பான் கார்டு எண்ணை குறித்து வைத்துக் கொள்வது, தங்க கடன்கள் மீதான கட்டுப்பாடு விதிப்பது மற்றும் தங்க கடன்களை கையாளும் என்பிஎப்சி கிளைகளில் சோதனை மேற்கொள்வது உள்ளிட்ட பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி குழு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.