சென்னை: நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவியரில் சிலர் தங்களுடைய மேல்படிப்பை வெளிநாடுகளில் தொடரலாம் என்று கனவு காண்பர். அவர்களுடைய பெற்றோரும், தங்களிடம் இருக்கும் சொத்துக்களை விற்று ஒரு பெரியத் தொகையைத் திரட்டி அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பர். ஆனால் வெளிநாடு சென்ற பின்பு சூழ்நிலை மாறலாம்.
அதாவது வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் போது அவர்களுக்கு கொடிய வியாதி ஏற்பட்டால் அல்லது இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் யாராவது இறந்துவிட்டால் அல்லது வேறு பல காரணங்கள் ஏதாவது இருந்தால் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வரவேண்டிய நிலைமை ஏற்படலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர்களுக்கு மிகப் பெரிய தொகை தேவைப்படும். இந்த சூழ்நிலைகளில் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மாணவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி அவர்களுக்கு சிறப்பான முறையில் உதவி செய்கிறது. எனவே மாணவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு முன்பாக மாணவர்கள் இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
இந்தியாவில் பல நிறுவனங்கள் மாணவர்கள் இன்சூரன்ஸ் பாலிசியை சிறப்பாக வழங்குகின்றன.
ஐசிஐசிஐ லம்பார்ட்
உதாரணமாக ஐசிஐசிஐ லம்பார்ட் வழங்கும் ஸ்டூடண்ட் ஓவர்சீஸ் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியானது, வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் பொதுவான மருத்துவச் செலவுகள், பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கான செலவுகள் மற்றும் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஆகும் செலவுகள் ஆகியவற்றை கவர் செய்கிறது.
அதோடு அவர்களின் மகப்பேறு செலவுகள், ஒருவேளை மனநிலைப் பாதிக்கப்படால் அதற்கான செலவுகள், புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகள் மற்றும் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அதற்கான செலவுகள் போன்றவற்றையும் கவர் செய்கிறது.
டாடா ஏஐஜி
டாடா ஏஐஜி வழங்கும் ஸ்டூடண்ட் கார்ட் ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசியானது ஒருபடி மேலே சென்று, வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள், மருத்துவ காரணங்களுக்காகவோ அல்லது இதர சரியான காரணங்களுக்காக அவர்களால் தங்களது படிப்பை அங்கு தொடர முடியாமல் போனால் அவர்கள் செலுத்திய டியூஷன் கட்டணத்தைக்கூட திரும்பப் பெறுவதற்கு ஆவண செய்கிறது.
அதுபோல், அந்த மாணவர்களை படிக்க வைக்கும் அவர்களுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் இறந்துவிட்டாலோ அல்லது அவர்கள் கொடிய நோயினால் படுத்து படுக்கையாகி விட்டாலோ, அந்த மாணவர்கள் தாங்கள் செலுத்த இருக்கும் கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஸ்டூடண்ட் கார்ட் ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி வழிவகை செய்கிறது.
மேலும் அவர்களுடைய பெற்றோர் அல்லது கணவர், மனைவியர் இறந்துவிட்டாலோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ, அவர்களை இந்தியா வந்து பார்ப்பதற்கு அந்த மாணவர்களுக்கு ஆகும் விமானச் செலவுகளை இந்த பாலிசி கவனித்துக் கொள்கிறது.
வெளிநாடு கிளம்பும் முன் பாலிசி எடுங்கள்
பொதுவாக பல்கலைக்கழகங்கள் இன்சூரன்ஸ் பாலி வசதிகளை மாணவர்களுக்கு செய்து தருகின்றன. ஆனால் அவர்கள் படிக்கும் காலத்தில் மட்டுமே இந்த பாலிசிகள் அவர்களுக்கு உதவி செய்யும். அவர்கள் விடுமுறையில் இருக்கும் போதோ அல்லது அவர்கள் படிப்புக்கு இடையில் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் போதோ அந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் அந்த மாணவர்களுக்கு உதவி செய்யாது.
எனவே வெளிநாடுகளுக்கு சென்று படிக்க இருக்கும் மாணவர்கள் டாடா ஏஐஜி மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் வழங்கும் மாணவர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பது நல்லது.