அசோசெமால் நடத்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பகுப்பாய்வு, "இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை, இந்த ஆண்டு (மார்ச், 2013)ரூ. 92,600 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இது கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதத்தை விட ரூ 42,000 கோடி குறைவாகும்" என தெரிவித்துள்ளது.
"இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் சரிவை கண்டுள்ள போதிலும், குஜராத் மட்டும் 700 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. அம்மாநிலம் கடந்த மார்ச் மாதம் வரை ரூ 17,000 கோடி மதிப்புடைய முதலீடுகளை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ 15,000 கோடி அதிகமாகும்", என்று பகுப்பாய்வின் அறிக்கையை வெளியிட்டு அசோசெம் தேசிய பொதுச் செயலாளர் எஸ். ராவத் கூறினார்.
"கேரள மாநிலம், குஜராத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது. இது 550 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அடுத்த படியாக உத்தரகண்ட் 400 சதவீதமும், ராஜஸ்தான் 175 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது" என ராவத் கூறினார். இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட மேற்கூறப்பட்ட இதே காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய முதலீடுகள் 50 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், கடந்த நிதி ஆண்டில், இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடுகளில், 41 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை தன்பக்கம் ஈர்த்துள்ளது என்று அசோசெம் பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது. குஜராத்தை அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் 17 சதவீத பங்கையும், கர்நாடகா 10 சதவீதத்தையும், தமிழ்நாடு 8 சதவீதத்தையும், உத்தர பிரதேசம் 6 சதவீத பங்கையும் தன்பால் ஈர்த்துள்ளன. இந்த மாநிலங்கள் ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்பட்ட புதிய முதலீடுகளின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
அசோசெமின் ஆய்வின்படி, மார்ச் 2013 வரை இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த நிலுவைத் தொகை ரூ. 14 லட்சம் கோடி ஆகும். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்கு மட்டும் 20 சதவீதம் ஆகும். இவ்வாறு இருந்த போதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வருவாய் ஆண்டில் மேற்கொள்ளப்படும் ரியல் எஸ்டேட் துறைக்கான புதிய முடலீடுகள் 55 சதவீத சரிவை சந்தித்துள்ளன.