பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கியில் பதிவு செய்யபட்ட இந்நிறுவனம், அங்கு சுமார் 800 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஊழியர் பிரதிநிதிகளுடன் வேலைகள் குறைப்பு நடவடிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்லாந் புரொபெஷனல் பொறியாளர்கள் யூனியன் (UIL) சுமார் 412 வேலைகள் ஊசலாட்டத்தில் உள்ளன எனத் தெரிவித்துள்ளது. மேலும் அது பணி நீக்கம் சம்பந்தமாக டிசிஎஸ் நிறுவனம் தவறான தகவல்களைத் தருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் இன் பணி நீக்கம் பற்றி கேட்ட பொழுது "நான் 412 என நினைக்கிறேன். அதுவே சரியான எண்ணிக்கை எனவும் நம்புகிறேன்," என்று UIL இயக்குனர் இஷ்மோ கோக்கோ தெரிவித்தார்.
இதைப் பற்றி டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: "அதிகபட்சமாக பாதிக்கப்பட போகும் இடங்கள் கண்டிப்பாக 290 தான். நீங்கள் குறிப்பிடும் எண்கள் தவறானது"
பணி நீக்கம் செய்யப்படக் கூடிய இடங்கள் 290 க்கும் குறைவாகக் கூட இருக்கலாம், என டிசிஎஸ் நிறுவனத்தின் மேலாண்மை சிந்தனைக்கு மிக நெருக்கமான மற்றும் அந்தரங்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் டிசிஎஸ் பின்லாந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து சுமார் 160 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். இந்த ஊழியர்கள் நோக்கியா நிறுவனத்தால் மார்ச் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆவார்கள். இந்த ஊழியர்கள் எஸ்பூ, சாலோ, டாம்பீரி மற்றும் ஓலூ போன்ற இடங்களில் பணியில் இருக்கின்றனர்.
"ஏப்ரல் 25 அன்று, பின்லாந்து நோக்கியா நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து டிசிஎஸ் அலுவலகங்களில் இருந்தும் ஒரு தன்னிச்சையான வெளிநடப்பு நடைபெற்றது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணி கோபமாக உள்ளனர். அவர்கள் டிசிஎஸ் நிறுவனம் ஏழு வாரங்களிலிலேயே அதன் உண்மையான நிறத்தை காட்டி விட்டதாக நினைக்கின்றனர். மேலும் பலர் நோக்கியா நிறுவனம் இந்த பணி நீக்கம் மற்றும் அழுக்கான வேலைகளை டிசிஎஸ் நிறுவனத்திற்கு அவிட்சோர்ஸ் செய்து விட்டதாக நினைக்கின்றனர்" என இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நோக்கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களை அவுட்சோர்சிங் செய்வது பற்றிய தனது அறிவிப்பை வெளியிட்டது. அதில் சுமார் 820 ஊழியர்களை பணிமாற்றம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தது. அதில் சுமார் 560 ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்திற்கும், 230 ஊழியர்கள் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கும் மாற்றப்பட்டனர், என கோக்கோ தெரிவித்தார்.
இதைத்தவிர நோக்கியா நிறுவனம் இது வரை சுமார் 300 ஊழியர்களை அதன் மென்பொருள் பிரிவிலிருந்து பணி நீக்கம் செய்துள்ளது.
மேலும் கோக்கோ "ஊழியர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் தற்போது நடை பெற்று வருகிறது. அது சீக்கிரமே முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்தார்.
"டிசிஎஸ் நிறுவனம் ஃபின்னிஷ் சட்டத்தின் படி தற்பொழுது ஊழியர் பிரதிநிதிகளுடன் தனது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளுக்கான குறைந்தபட்ச கால அவகாசம் சுமார் ஆறு வாரங்களாகும். அது கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும். அதன் பிறகு, டிசிஎஸ் நிறுவனம் எத்தனை நபர்களை பணி நீக்கம் செய்யப் போகிறது போன்ற தனது இறுதி திட்டத்தை தெரிவிக்கும்" என அவர்கள் கூறினர்.
இந்த ஆண்டு உலகளவில் சுமார் 45,000 பேர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டம் டிசிஎஸ் நிறுவனத்திடம் உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கும் வேலையில் இந்த பணி நீக்க அறிவிப்பு வந்துள்ளது.
வேலையின் அளவு குறையாத நிலையில் இந்த வேலை நீக்கத்தை நியாப்படுத்த முடியாது என கோக்கோ கூறினார்.
"நாம் அனைத்து தொழிலார்களும் தங்களுடைய பணியில் தொடர்வதையே விரும்புகிறோம். ஏனெனில், அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நோக்கியா நிறுவனத்தில் இருந்து அவுட்சோர்சிங் செய்யப்பட்டார்கள். மேலும் அவர்கள் நோக்கியா நிறுவனத்திற்கு செய்யும் வேலையின் அளவும் குறையவில்லை", என்று அவர் கூறினார்.
அவர், மேலும் "எங்களுடைய வேலைகள் பின்லாந்துக்கு வெளியே இந்தியாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ சென்றுவிடும் என்கிற பயம் எங்களிடையே இருக்கிறது. அதுவே எங்களுடைய முக்கிய கவலையாக உள்ளது", எனத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் பற்றி, டிசிஎஸ் செய்தி தொடர்பாளர் குறிப்பிடுவதாவது: "ஏப்ரல் 23, 2013 அன்று, நாங்கள் டிசிஎஸ் பின்லாந்து நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ஒழுங்கு படுத்துவதற்காகவும், அதை நம்முடைய உலகளாவிய செயல் நடவடிக்கைகளுடன் ஒத்திசைக்கும் பொருட்டும் ஊழியர் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை தொடங்கியுள்ளோம். இந்த செயல்முறை அதிகபட்சமாக டிசிஎஸ் பின்லாந்தின் 290 பணியாளர்களை பாதிக்கும். எனினும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கான மாற்று வேலை வாய்ப்புகளை கூடிய சீக்கிரமே கண்டறிவதே எங்களுடைய முக்கியமான நோக்கம் ஆகும்."
இந்த ஆலோசனை செயல்முறை, டிசிஎஸ் பின்லாந்து நிறுவனத்தின் வணிக அலகுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நடைபெறுகிறது. இதன் நோக்கம் இன்சோர்ஸ்ட் ஊழியர்களை பற்றியது மட்டுமல்ல. பின்லாந்தின் அனைத்து வணிக அலகுகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்காகவும் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறோம் என செய்தி தொடர்பாளர் கூறினார்.
"பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். அது வரை அதைப் பற்றிய முழுமையான செய்தியை வழங்க இயலாது" என செய்தி தொடர்பாளர் கூறினார்.