இந்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஓய்வூதிய திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இத்திட்டத்தை ஓய்வூதிய ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது. முதன் முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டம், 2009 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து அனைத்து குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின்படி, நம் ஓய்வூதியக் கணக்கில், குறிப்பிட்ட தொகையை, நமக்கு ஏற்ற கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக செலுத்தி வர வேண்டும். இப்படி செலுத்திய தொகையின் ஒரு பகுதியை மொத்தமாகவும், மீதமுள்ள தொகையை மாதாந்திர வருமானமாகவும் நாம் விரும்பும் போது பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கணக்கு தொடங்குவதின் பயன்கள் என்ன?
வளைந்து கொடுக்கும் வசதியான திட்டம்
இந்திய குடியுரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். ஒரு வருடத்திற்கு எவ்வளவு பணம் முதலீடு செய்ய முடியும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் முதுமையில் பொருளாதார பாதுகாப்பும், வருமானமும் கிடைக்க வழிவகுக்கும்.மேலும், நாம் செலுத்திய தொகையை, எதில் முதலீடு செய்ய வேண்டும், இதனை யார் நிர்வகிப்பது என்பதை நாமே தீர்மானித்துக்கொள்ளலாம்.
கவலையின்றி கணக்கைப் பயன்படுத்தலாம்
தேசிய ஓய்வூதிய கணக்கை நாட்டின் எந்த மூலையில் இருந்து உபயோகிக்க முடியும். மேலும், வேலை மாறினாலோ, ஊர் மாறினோலோ அல்லது ஓய்வூதிய அதிகாரி மாறினாலோ எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை. நம்முடைய ஓய்வூதிய கணக்கு பத்திரமாக இருக்கும். அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
ஒழுங்குபடுத்தப்பட்ட பாதுகாப்பான திட்டம்
தேசிய ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிப்பது ஓய்வூதிய ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம். வெளிப்படையான முதலீட்டு கொள்கையை கொண்ட இந்த ஆணையம்,நம் முதலீடுகளையும், அதன் மூலம் வரும் வருவாயையும் கண்காணித்து ஓய்வூதிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
வரிச் சலுகை
ஓய்வூதிய திட்டத்தில் பணம் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டம் 80C படி வரிவிலக்கு உண்டு. அதாவது, வருடத்திற்கு 1 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியும்.
நியாயமான இலாபம்
இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதுமையில் பொருளாதார பாதுகாப்பு மட்டுமன்றி, குறிப்படத்தக்க இலாபமும் அடையலாம். நம் ஓய்வூதிய கணக்குத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால், இலாப / நஷ்டம் குறித்து சந்தை தான் தீர்மானிக்கும். எது எப்படியிருந்தாலும், தொலைநோக்கு பார்வை கொண்ட முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் ஒரு பெரிய வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.
ஓய்வூதியம்
அரசு நிறுவனங்கள் தவிர்த்து, பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் ஓய்வூதியம் என்ற ஒன்றே கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு, தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு சிறப்பான தீர்வாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.