ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், நம்முடைய வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர்க் கடன் போன்றவற்றின் மாதாந்திர கடன் தவணைத் தொகையில் எவ்வித மாற்றமும் இருக்காது. அவ்வளவு எளிதில், நம்முடைய EMI சுமையும் குறைய வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
நல்ல வீடு வாங்க வேண்டும், அதற்காக அதிகத் தொகையைக் கடனாகப் பெற வேண்டும். வட்டி விகிதம் குறையட்டும், வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. அவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சரி. அடுத்த 6 மாதத்திலாவது வட்டி விகிதம் குறையுமா, வீடு வாங்கும் திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டால், அதுவும் கஷ்டம் தான். வட்டி விகிதம் இப்போதைக்கு குறையுமா இல்லையா என்பதை யூகிக்க இயலாது. பணவீக்கம் நன்றாக குறைந்தால் மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எப்போ தான் பணவீக்கம் குறையும் என்று மறுபடியும் கேட்டால், அது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!.
தற்போது, நுகர்வோர் விலைக் குறியீடு மிகவும் உயர்ந்து இரண்டு இலக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் பணவீக்கம் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி அடைகிறது. இதனால் நடப்பு கணக்கில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியை விட, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்வதே முக்கிய கடமை என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இன்னும் சில மாதங்களில், வட்டி விகிதம் அதிகபட்சமாக 0.50% குறைக்கப்படலாம். அதற்கு மேல் குறையும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் தரும்.
நம்முடைய கடன்(EMI) சுமை குறையுமா, நம் வாழ்வு வளம் பெறுமா என்று எதிர்பார்க்கும் நம்மைப் போன்ற பலருக்கு இது ஒரு ஏமாற்றமான அறிவிப்பு தான்.