இந்தியா அவுட்லுக்கில் ஃபிட்ச் ரிவிஷனைத் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, உலகம் முழுவதும் இந்தியாவின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளைப் பற்றி விரிவுரை ஆற்றிய அவர், இந்த ஜூன் மாத இறுதிக்குள், அந்நிய நேரடி முதலீடுகளின் வரையறைகள், நிலக்கரி விலை நிர்ணயம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஒதுக்கீடு, மற்றும் எரிவாயு விலை நிர்ணயம் போன்றவற்றில் மறுசீராய்வு அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசால் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தந்துள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசு தலைப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், ஒவ்வொரு அமைச்சகத்தையும் துரிதமான முறையில் செலவீனம் செய்யவும் அரசு ஊக்கமளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ரூபாய் மதிப்பின் தற்போதைய சரிவைப் பற்றிக் கூறும்போது, சிதம்பரம் அவர்கள், அதிக கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறையைக் கொண்ட நாடுகள் பல முறை, தங்கள் நாணயங்களின் மதிப்புக்குறைவையும் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. ரூபாய் அதற்குண்டான நிலையை எட்டும்; ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று நம்புவதற்கு தகுந்த காரணங்கள் ஏதுமில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.