தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தால் அது இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அறிந்த இந்திய ரிசர்வ் வங்கி, தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அதிக கெடுபிடி காட்டியது. அதனைத் தொடர்ந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வரியை மேலும் 2% அதிகரித்தது இந்திய அரசு. அதன் விளைவாக இந்தியாவின் தங்க இறக்குமதி இந்த ஜூன் மாதம் கணிசமான அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜூன் மாதம் தங்கத்தின் இறக்குமதி அளவு 40 டன்களுக்கும் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. கடந்த 2 இரண்டு மாதங்களில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்ததால், இந்திய சந்தையில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 120 டன் தங்கமும் மே மாதத்தில் 75 டன் தங்கமும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் கடந்த செவ்வாய் அன்று மும்பை ஸ்பாட் சந்தையில் 10 கிராம் தங்கம் ரூ.28,025க்கு விற்பனை செய்யப்பட்டது. எம்சிஎக்சில் 10 கிராம் தங்கம் ரூ.28,095க்கு விற்கப்பட்டது.