கடந்த மாதம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக அதாவது 10 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. அதன் மூலம் 1 அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 60 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவ்வாறு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதால், 5 முக்கியமான செலவுகளில் அளவு அதிகரித்திருக்கின்றன.
வெளிநாட்டு பயணம்
கடந்த மாதத்திற்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போது பயணக் கட்டணமாக 100 அமெரிக்க டாலர்களைச் செலுத்த வேண்டியிருந்தால் அதற்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.5,500ஐ செலுத்தி இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், 100 அமெரிக்க டாலர்களுக்கு நீங்கள் ரூ.6,000 செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றாலும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியால், நீங்கள் அங்கு செய்யும் செலவுகளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வெளிநாடுகளில் படிப்பு
குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால், தற்போது இந்திய ரூபாயின் வீழ்ச்சியின் காரணமாக, உங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக 10% அதிகமாக பணத்தை செலவழிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக 2 வருடங்களுக்கு உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக நீங்கள் 1 லட்சம் டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தால், அதற்கு நீங்கள் ரூ.55 லட்சம் செலவழித்திருக்க வேண்டும். ஆனால் அதுவே இப்போது நீங்கள் ரூ.60 லட்சம் செலவழிக்க வேண்டும்.
பெட்ரோல் விலை
இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை அதிகரித்துவிட்டன. தற்போது டீசலின் விலையையும் உயர்த்த காத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடந்தால் அத்தியாவாசிய உணவுப் பண்டங்களின் விலையும் கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்
இந்திய ரூபாயின் வீழ்ச்சியினால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பொருள்களின் விலை 20% அளவிற்கு உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உணவுப் பொருள்களின் விலையும் கணிசமான அளவில் உயரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தங்கம்
கடந்த ஒரு மாதமாக, தங்கத்தின் விலை 10% அளவிற்கு குறைந்திருக்கிறது. ஆனால் தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு அதிகமான பணத்தைச் செலுத்த வேண்டும்.