பி.கே மோடி தலைமையில் இயங்கி வரும் ஸ்பைஸ் நிறுவனம், முதல் முறையாக வங்கித் துறையில் களமிறங்க இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முயற்சியில் ஏற்கனவே ஸ்பைஸ் நிறுவனம் இறங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்று, வங்கிகளை திறப்பதற்கான உரிமத்தைப் பெற, ஒரு ஓவர்சீஸ் வங்கியிடம், ஸ்பைஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டிருக்கும் ஸ்பைஸ் நிறுவனம், செபியின் முன்னால் தலைவரான டாக்டர் மேத்தாவை தனது நிறுவனத்திற்குள் இழுத்திருக்கிறது. தனது வங்கிகளைத் திறப்பதற்காக, அவருடைய தலைமையின் கீழ் வங்கித் துறையைச் சேர்ந்த அனுபவம் பெற்ற மூத்த அதிகாரிகளைக் கொண்டு ஒரு புதிய போர்டை உருவாக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மோடி மற்றும் மற்ற ஸ்பைஸ் பங்குதாரர்கள் ஸ்பைஸின் 49 சதவீத பங்குகளைக் கொண்டிருப்பார்கள். மீதி பங்குகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருப்பார்கள்.
ஸ்பைஸ் குழுமம் தனது வங்கிகளைத் திறந்தால், அது ரெலிகார் குழுமம், ஸ்ரீராம் குழுமம், எஸ்ஆர்இஐ இன்ஃப்ரா ஃபைனாஸ், ஜேஎம் ஃபைனான்சியல், எடல்வெய்ஸ், எல்&டி மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களோடும் போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கும். ஜூன் 30க்குள் வங்கி உரிமத்திற்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கியில் ஸ்பைஸ் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.
தனது மொபைல் வர்த்தகத்தைப் பயன்படுத்தி, பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கிகளைவிட மிகச் சிறந்த முறையில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஸ்பைஸ் திட்டமிட்டு வருகிறது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.