இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு நிறுவனத்திற்கு இது ஒரு மிகப் பெரிய முதலீட்டுத் தொகையாகும். இந்த முதலீட்டின் மூலம் நமது திறமைகளில் மட்டும் நமது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. மாறாக இந்தியா ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற இடம் என்பதில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்று ஃபிலிப்கார்ட்டின் தலைமை இயக்குனர் சச்சின் பன்சால், பிடிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இந்த முதலீட்டுப் பணத்தை, புதிய கட்டிடங்களை அமைப்பதற்கும், புதிய தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தவும், மற்றும் பொருள்களை விநியோகம் செய்வதில் நவீன முறைகளைக் கொண்டுவரவும் ஃபிலிப்கார்ட் செலவிட இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த முதலீட்டுப் பணம், ஃபிலிப்கார்ட் தனது தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடையவும், பொருள்களை விநியோகம் செய்வதில் புதுமைகளைப் புகுத்துவதற்கும் பயன்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த முதலீடு, 2015க்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மொத்த சந்தை மதிப்பை அடைய வேண்டும் என்ற எங்களுடைய குறிக்கோளை மட்டும் நிறைவு செய்யாமல், வரும் காலத்தில் பல மிகப் பெரிய மைல்கற்களை அடைய உதவி செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதுவரை ஃபிலிப்கார்ட் பெற்ற முதலீடுகள், ஃபிலிப்கார்ட்டின் பங்குதாரர்கள், மற்றும் ஃபிலிப்கார்ட்டின் பங்குகளை வாங்கியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். எனினும் இதுவரை நான்கு கட்டங்களாக, 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டை ஃபிலிப்கார்ட் திரட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பான முறையில் பொருள்களை வாங்கும் அனுபவத்தை வழங்குவதும், அதுபோல் பொருள்களை விற்பவர்கள் சிறந்த முறையில் தங்கள் பொருள்களை விற்பதற்கான ஒரு நல்ல தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தங்களின் நோக்கம் என்று ஃபிலிப்கார்ட்டின் இணை தலைவரான பின்னி பன்சல் தெரிவித்திருக்கிறார்.
தாங்கள் "96 லட்சம் பதிவு செய்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாக" கூறுகிறது ஃபிலிப்கார்ட். மேலும் ஒவ்வொரு நாளும் ஃபிலிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தை 10 லட்சம் புதிய பார்வையாளர்கள் பார்க்கின்றனர் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஃபிலிப்கார்ட் ஏறக்குறைய 17 வகையான பொருள்களை தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. குறிப்பாக புத்தகங்கள், ஆடைகள், காலணிகள், பொம்மைகள், உதிரி பாகங்கள், விளையாட்டு சம்பந்தமான உபகரணங்கள், உடற்பயிற்சி கருவிகள் மற்றும் இ-புத்தகங்கள் போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது.
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள், இந்தியாவில் இருக்கும் ஆன்லைன் வர்த்தக வளர்ச்சியைக் கணக்கில் எடுத்து 2011ல் இந்திய ஆன்லைன் வர்த்தக துறையில் 308 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றனர் என்று இஒய் என்ற உலகளாவிய புரஃபசனல் சேவை அமைப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்த 2011 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மட்டும் இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக துறையில் 37 ஒப்பந்தங்கள் மூலம் 305 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தொகை, 2010 ஆம் ஆண்டில் 12 ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட 55 மில்லியன் அமெரிக்க டாலர்களைவிட அதிகம் என்று அந்த சேவை அமைப்பு தெரிவித்திருக்கிறது.