வருமான வரித்துறையில் மிகப் பெரிய அளவிலான துறை கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதோடு, வெவ்வேறு தரங்களில் சுமார் 20,751 பணியிடங்களை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ள அரசின் சமீபத்திய தீர்மானத்தின் படி, அதற்கான பட்டியலை முடிவு செய்யும் பொருட்டு கூட்டப்பட்ட ஐ-டி மற்றும் நேரடி வரிகளின் மத்தியத் துறைகளைச் (சிபிடிடி) சேர்ந்த உயரதிகாரிகளின் கூட்டத்தில், இந்த திட்ட அறிக்கை விரிவாக விவாதிக்கப்பட்டு, பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் தலைமை திட்டமிடல் அமைப்பான சிபிடிடி இத்தீர்மானத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. "இது இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஐ-டி அலுவலகம் திறப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் வசித்து வரும் வரி செலுத்துவோரின் அவதிகளைக் குறைப்பதோடல்லாமல் வரிக்கான அடித்தளத்தையும் விரிவாக்கி அரசு கஜானாவின் வருவாயையும் அதிகரிக்க உதவும்." என்று இந்த வளர்ச்சித் திட்டத்தில் பங்கு வகிக்கும் ஒரு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த மிகப் பெரிய மறுகட்டமைப்பு திட்டத்தை இந்த வருட இறுதிக்குள் செயல்படுத்த வருமான வரித்துறை தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது, மெட்ரோ, செமி-மெட்ரோ நகரங்கள் மற்றும் சில சிறு நகரங்களில் மட்டுமே ஐ-டி அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஆனால், ஏராளமான மாவட்டங்களில் இது போன்ற அலுவலகங்கள் ஒன்று கூட இல்லை; ஆகையினால் இங்கு வசித்து வரும் வரி செலுத்தும் மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கோ அல்லது மாவட்டங்களுக்கோ சென்றே தங்கள் வரி தொடர்பான பணிகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் சிபிடிடி நாடெங்கிலும் தலைமைப் பொறுப்பில் உள்ள அதன் உயரதிகாரிகள் அனைவரையும் அழைத்து இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியை தீர்மானிக்க ஆலோசனை நடத்தியுள்ளது.
இத்திட்டத்திற்கான வருமான வரித்துறையின் சமீபத்திய செயல்திட்டத்தில், "வரி நிர்வாகத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இத்துறை சார்ந்த வரி விதிப்புப் பிரிவுகளின் எண்ணிக்கையை 3,420 -லிருந்து சுமார் 4,500 வரை, அதாவது கூடுதலாக சுமார் 1,080 பிரிவுகள் வரை அதிகரிக்கப்போவதாகக்" குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை "வருடத்திற்கு சுமார் 449.71 கோடி ரூபாய் செலவில், சுமார் 25,756.04 கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் இந்த செயல்திட்டம் தெரிவிக்கிறது.
"வருமான வரித்துறையின் இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள்கள் வருமான வரித்துறையின் திறனை மேம்படுத்துவதும், வருவாய் வசூலை அதிகரிப்பதும், ஊழியர்களின் பணி சார்ந்த வருங்கால வாய்ப்பை மேம்படுத்துவதோடு வரி செலுத்துவோருக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுமே ஆகும்." என்று இந்த செயல்திட்டம் தெரிவிக்கிறது.