இந்தியாவில் அனைத்து துறைகளிலும், பொருளாதாரம் பலத்த அடி வாங்கும் இந்நிலையில், நமது இந்திய ரயில்வே துறை ஒரு விதி விளக்காக விளங்குகிறது. இந்தியா ரயில்வே துறையில் கடந்த சில வருடங்களாக பல முன்னேற்றமும், மாறுதல்களையும் அடைந்து வருகிறது. இந்த மாற்றத்தில் முக்கிய இடம் பிடிப்பது, இரண்டு அடுக்கு ரயில் பெட்டிகள். சில மாதங்களுக்கு முன்பு சென்னை முதல் பெங்களூர் வரை செல்லும் தென் இந்தியாவில் முதல் இரண்டு அடுக்கு ரயில் சேவை துவங்கப்பட்டது, இது மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
இந்திய ரயில்வே துறை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகப்படியான வருவாயை ஈட்டியது. மேலும் இங்கே ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை அடைந்த வருவாயை பட்டியலிட்டு உள்ளோம்.
மொத்த வருவாய்
இந்திய ரயில்வே துறையின் மொத்த வருவாயாக கடந்த வருடம் (2012) ஏப்ரல் - ஜூன் மாதங்களில் சுமார் 29,926.67 கோடியை வருவாயாக ஈட்டியது. ஆனால் இந்த வருடத்தின் (2013) வருவாய் 33,497.09 கோடியாகும். இது கடந்த வருடத்தை விட 11.93% அதிகமாகும்.
சரக்குகள் ரயில் வருவாய்
இந்திய ரயில்வே துறைக்கு சரக்கு ரயில்களின் முலம், 2012 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் வருவாய் சுமார் 21,211.41 கோடியாக இருந்தது, இந்த வருடம் (2013) 23,193.98 கோடியாகும். இது கடந்த வருடத்தை விட 9.35% அதிகமாகும்.
பயணிகள் ரயில் வருவாய்
ரயில் பயணிகளின் முலம், கடந்த வருடம் 7,462.17 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியது, இது 2013ஆம் வருடத்தில் 16.92% அதிகரித்து 8,724.66 கோடியாக உள்ளது.
பதிவு பயணிகளின் வருவாய்
மேலும் பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் முலம், 2012ஆம் ஆண்டு 744.73 கோடியை வருவாயாக ஈட்டியது. இந்த வருடம் 36.21% அதிகரித்து 1,014.36 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
இதர வருவாய்
இந்திய ரயில்வே துறைக்கு இதர வருவாயாக சுமார் 2,100.20 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த வருடத்தை விட 0.69% குறைந்துள்ளது, கடந்த வருடம் 2,114 கோடியாகும்.