நாம் ஒவ்வொருவரும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் வளமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு நாளையும் துவங்குகிறோம். பணி நிமித்தமாகவும், இதர கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறும் நாம், எத்தகைய சூழல்களை சந்திக்க நேரிடும் என்பது கணிக்கவியலாத ஒன்று.
சில தனிப்பட்ட மற்றும் சமூக சூழல்கள், நம் குடும்பங்களை பாதிக்கலாம் அல்லது பாதிக்காமலும் போகலாம். ஆனால் சில மோசமான சூழ்நிலைகள் நம்மையும் நம் குடும்பத்தினரையும் கடுமையாக பாதிக்கக்கூடும். சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ள சில நிதித் திட்டங்கள் மிக மோசமான காலகட்டங்களில் நமக்கு கைகொடுக்கும்.
ஆனால் எல்லோரும் எதையும் எதிர்கொள்ளும் அளவிற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று கூற முடியாது. இப்போது இல்லாவிட்டாலும் என்றேனும் எதிர்கொள்ளக்கூடிய இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாளலாம் என்று அறிந்து வைத்துக் கொள்ளுதல் நலம்.
இத்தகைய சூழல்களுக்கு உங்களை நீங்கள் எந்த அளவிற்கு தயார் நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கலாம். கீழ்ளே கொடுக்கப்பட்டுள்ள சூழல்கள் சற்று கடுமையாக தான் இருக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டு படிக்கவும்.
1. ஒருவேளை நீங்கள் இறக்க நேரிட்டால்...?
மிகவும் அச்சம் தரக்கூடியதும், உறுதியாக நிகழப்போவதுமான இறப்பு என்ற நிகழ்விலிருந்து ஆரம்பிக்கலாம். உங்கள் நிதிகள் அனைத்தும் உங்கள் குடும்பத்தின் எதிர்கால தேவைகளை நிறைவேற்றக் கூடிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளனவா? நீங்கள் போதுமான அளவிற்கு இன்ஷியூர் செய்யப்பட்டுள்ளீர்களா? உங்கள் நிதி, வேலை மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உங்கள் குடும்பத்தினர் அறிவார்களா? நீங்கள் உயில் ஏதும் தயார் செய்து வைத்துள்ளீர்களா? என்பது போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட வேண்டியவையாகும்.
குடும்பத்தின் சம்பாதிக்கும் நபராக, உங்கள் கடமை சம்பாதிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை, அதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. உங்கள் வாழ்நாளின் போது உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு, உங்கள் இறப்புக்குப் பின்னும் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. நன்கு திட்டமிட்டு, உங்கள் முதலீடு மற்றும் உங்களின் அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் பற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் தெரிய வேண்டும், இதன் முலம் நீங்கள் மறைந்த பின்னும் உங்கள் குடும்பத்தினர் நீண்ட காலத்திற்கு பணக்கஷ்டம் இன்றி வாழ வழி குக்கக்கூடியனவாகும்.
2. ஒருவேளை உங்கள் பணியை இழக்க நேரிட்டால்...?
தற்போதைய பொருளாதார சூழலில், பணியை இழக்க நேரிடுமோ என்ற பயம் பெரும்பாலானோரின் மேல் பூதாகரமாக கவிழ்ந்துள்ளது. பணியிழப்பு ஒரு தனிநபரை வேலையை இழந்து, எதற்கும் உபயோகமற்றவராய் உணரச் செய்வதோடல்லாமல் அவரின் வாழ்வையே ஒட்டுமொத்தமாக புரட்டிப் போடக்கூடியதாகும்.
உங்கள் குடும்பத்தினர் இந்த அதிர்ச்சியை எவ்விதம் தாங்கிக் கொள்வர்? நீங்கள் உங்கள் குழந்தைகளின் படிப்பு, உடல்நலத் தேவைகள் மற்றும் அன்றாட வாழ்வின் தேவைகள் ஆகியவற்றுக்கான பணத்தேவைகளுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா? சில மாதங்களுக்கு சம்பளம் இன்றி வாழ்வதற்கு நீங்கள் நிதி அடிப்படையில் தயாராக இருக்கிறீர்களா? உங்கள் நிலையான வருமானம் பறிபோகும் பட்சத்தில், நீங்கள் பணத்தைப் புரட்டுவதற்கான வாய்ப்புகள் எதுவும் உள்ளனவா? கஷ்ட தினங்களை சமாளிக்கவென்று ஏதேனும் சேமித்து வைத்திருக்கிறீர்களா? உங்கள் சேமிப்புகள் உங்கள் பணியிழப்பை சில காலத்திற்கு ஈடு செய்யக்கூடிய அளவில் உள்ளனவா? உங்கள் வருமானத்திற்கு வேறு ஏதேனும் மூலாதாரம் இருக்கின்றதா? நீங்கள் புதிய வேலையோ அல்லது உங்களுக்கு தேவைப்படும் பணத்தையோ சம்பாதிப்பதற்கு கூடுதல் தகுதிகள் எதையும் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இது போன்ற ஏராளமான கேள்விகளை கேட்பதற்கும், அவற்றிற்கான பதில்களை கண்டுபிடிப்பதற்கும் இதுவே சமயமாகும்.
3: ஒருவேளை உங்களுக்கு திடீரென்று சில லட்சங்கள் தேவைப்பட்டால்...?
நீங்கள் மூன்று மாதங்களுக்கான குடும்ப செலவிற்கு உண்டான தொகையை, சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் ஃபண்ட்கள் போன்றவற்றிலோ அல்லது உங்களுக்கு தேவையான போது எடுத்துக் கொள்ளக்கூடிய வகையிலோ சேமிப்பாக வைத்திருக்கும்படியான நிதி ஆலோசனையைப் பெற்றிருக்கக்கூடும். நாம் அனைவருமே இது போன்ற ஒரு குறிப்பிட்ட தொகையை நம் கணக்கில் வைத்திருக்கவும் கூடும்.
ஆனால், ஒரு நல்ல நிதிமுதலீட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது அவசர நிதித் தேவையை சமாளிக்கவோ, உடனடியாக சில லட்சங்களை புரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை எப்படி சமாளிப்பது? நம்மில் பலர் சுமார் 1 லட்சம் வரையிலான சேமிப்பை வைத்திருக்கலாம். ஆனால் உடனடியாக 5 முதல் 6 லட்சம் வரியிலான பெருந்தொகையை புரட்டுவதற்கு சரியான திட்டமிடல் தேவை. இது போன்ற சூழலில் ஒருவர் ரொக்கத் தொகை வைத்திருப்பதோடு, கால தாமதம் செய்யாமல் முடிந்த வரையில் உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்யக்கூடிய நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டிருத்தலும் மிக அவசியம். அத்தகைய ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு உங்களை தயார் செய்து கொள்வதற்கு இப்போதும் அவகாசமிருக்கிறது.
4. ஒருவேளை உங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தால்...?
இறப்பைப் போன்றே, மருத்துவமனை வாசமும் இன்றைய கடினமான காலகட்டத்தில் கட்டாயமான ஒன்றாகி விட்டது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய குறைபாடுகள் மற்றும் பல வகையான கேன்ஸர்கள் இளம் வயதினரை தாக்குவது, கடந்து போகும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக தகவலறிக்கைகள் கூறுகின்றன. இது போன்ற சூழலில், மருத்துவமனை சேர்க்கை என்பது உயிர் பிழைத்து வாழ்வோமா என்று அச்சுறுத்துவதோடல்லாமல், பெருஞ்செலவு பிடிப்பதாகவும் இருக்கிறது.
இது போன்ற ஒரு நேர்வை எதிர்கொண்டால் என்ன செய்வது என்று நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்களா? நீங்கள் போதுமான அளவு மருத்துவக் காப்பீடு பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறு பெற்றிருப்பின், அதனைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் அறிந்து வைத்துள்ளனரா? இத்தகைய நேர்வை சமாளிப்பதற்குத் தேவைப்படும் பணத்திற்கு ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா? எந்த மருத்துவமனையை, எந்த டாக்டரை, எந்த இன்சூரரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்கள் உங்கள் குடும்பத்தினர்க்கு தெரியுமா? உங்கள் தொடர்பு பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? நிதி தொடர்பான உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? என்பது போன்ற விஷயங்களை சிந்தித்து அதற்கு தக்க திட்டமிட்டுக் கொள்ளுதல் எவர்க்கும் அவசியமாகும்.
*மேற்கூறிய சூழல்கள் அனைத்தும் உண்மை. இவை நம்மில் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு சமயத்தில் பாதிக்கக்கூடியவையே. நன்றாக திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட ஒரு நிதி திட்டம் உங்களுக்கு உபயோகமாக இருப்பதோடல்லாமல், உங்கள் அன்பிற்குரியவர்களும் உணர்வுரீதியாகவும், பணரீதியாகவும் பாதுகாப்போடு வாழ வகை செய்யும்.
*நன்கு யோசித்து தீட்டப்பட்ட ஒரு நிதித்திட்டமானது, பண ரீதியில் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்தி, அதற்கு ஏற்றவாறு உயிர் காப்பீடு செய்யும்படி உங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த நிதித்திட்டம், உயில் எழுதி வைப்பதற்கும் உங்களுக்கு தூண்டுகோலாய் இருக்கும்.
*நல்லதோர் நிதித்திட்டமானது, உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் உங்கள் நிதி நிலைமையை எளிதாகப் புரிந்து கொண்டு, நீங்கள் எங்கே விட்டுச் செல்கிறீர்களோ அங்கிருந்து அழகாக நிர்வகிக்க உதவும்.
*மேலும் இது, உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பஉறுப்பினர்களுக்கு
தேவைப்படக்கூடிய சரியான அளவிலான உடல்நலக் காப்பீடை எடுக்க உங்களை வழிநடத்துவதன் மூலம் உங்கள் மருத்துவமனை செலவிற்கு உங்கள் கைக்காசை செலவழிக்க வேண்டிய அவசியமின்றிச் செய்யும். இந்நிதித்திட்டம், அவசர கால சேமிப்பு நிதியாக தேவையான பணத்தை உங்களை சேமிக்க வைத்து, அவசர காலத்தின் போது எளிதாக ரொக்கப்பணம் உங்கள் கைக்குக் கிடைக்குமாறு செய்ய உங்களுக்கு உதவும்.
*உங்கள் நிதி நிலைமையை நன்கு ஆராய்ந்து, ஏதேனும் இடைவெளிகள் இருந்தால், உடனே விழித்துக் கொண்டு அவற்றை நிரப்ப முயல்வதற்கு இதுவே சரியான நேரம். எனவே ஒரு நொடியை கூட வீணாக்காமல், மேற்கூறிய சூழல்களுக்கு திட்டமிடுவதற்கு சிறிந்த நிதி நிபுணர்களை அணுகுங்கள். ஒரு நிதி நிபுணர் இத்தகு சூழல்களை ஒருமுகமாக உற்று நோக்கி, நீங்கள் செயல்படுத்தக் கூடிய சிறந்த தீர்வுகளைக் கூறுவார்.