நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (CBDT) வருமான வரித்தாக்கல் செய்ய கடைசி நாளாக, ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்தது.
"இணையம் வழியாக வருமான வரித்தாக்கல் அதிகரித்து வரும் வேளையில், தனி நபர்களின் தகவல் திருடு போவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன " என மெக்காபீ (McAfee) தெரிவித்துள்ளது.
இணைய மோசடிப் பேர்வழிகள், வருமான வரித்தாக்கல் செய்பவர்களுக்கு போலி விளம்பரங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களுக்கு வரித்தாக்கல் செய்ய உதவுகிறோம் என ஏமாற்றி தகவல்களை திருடுகின்றனர். அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள், போலி விளம்பரங்கள் போன்றவற்றை சொடுக்கினால் வருமான வரித்துறை இணையதளத்தைப் போன்றே போலி இணையதளம் வருகிறது. அதை பார்த்து நம்பிவிடும் வரிச்செலுத்துவொரிடம் இருந்து, வங்கி கணக்கு, கடன் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பதியும் படி கூறி, அதன்மூலம் மோசடிப்பேர்வழிகள் விவரங்களை திருடுவது தெரியவந்துள்ளது.
இது போன்ற ஏதாவது சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்கள் அல்லது மின்னஞ்சல்களை திறக்க கூடாது மெக்காபீ அறிவுறுத்துகிறது. வங்கி கணக்கு, கடன் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பதியும் படி வருமான வரித்துறை கேட்பதில்லை. இதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று மெக்காபீ (McAfee) எச்சரித்துள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி வரை 1,03,21, 775 தனிநபர்கள் இணையம் வழியாக வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் இணையம் வழியாக வருமான வரித்தாக்கல் செய்தனர் என வருமான வரித்துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.