புது தில்லி: மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி (DA - dearness allowance) வரும் செப்டம்பர் மாதம் முதல் 80 சதவிகிதத்தில் இருந்து 90 சதவிகிதமாக உயர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறுவார்கள்.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, 10-11 சதவீதம் வரை இருக்கும் அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பயனுக்கு வரும் இருக்கும் என்று தெரிகிறது . ஜூலை மாததிற்கான தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI-IW) ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட பின்னர் சரியான எண்ணிக்கை கணக்கிடப்படும் எனத் தெரிகிறது.
ஜூலை 31 ம் தேதி அரசு வெளியிட்ட இடைக்கால தரவுகளின் படி, ஜூன் மாதத்திற்கான தொழிலாளர் சில்லறை பணவீக்கம் 11.06 விகிதமாக இருந்தது. அதே வேளையில் இந்த ஆண்டு மே மாதம் 10.68 சதவீதமாக இருந்தது.
12 மாத அல்லது ஒரு வருட தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்களை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு விகிதம் கணக்கெடுக்கப்படும். அவ்வாறு பார்க்கையில் ஜூலை 2012 முதல் ஜூன் 2013 வரையிலான சில்லறை பணவீக்கம் விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
" இந்த முறை 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்றும் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும்" மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் KKN குட்டி தெரிவித்தார்.
"90 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்துவது தவிர 50 சதவிகிதப் படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அகவிலைப்படி நீண்ட காலத்திற்கு முன்பே 50 சதவிகித அளவைத் தாண்டிவிட்டது" என்று அவர் கூறினார்.
50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுவது நடைமுறையாக இருந்துவருகிறது. அகவிலைப்படி இணைப்பு ஊழியர்களுக்கு உதவும்.
"2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 171 சதவீதம் வரை விலைவாசி விகிதம் உயர்ந்துள்ளதால், உண்மையில் இந்த அகவிலைப்படி உயர்வு உதவாது" என்று குட்டி தெரிவித்தார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வாக இது இருக்கும். கடைசியாக 2010 செப்டம்பர் மாதம் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் 2013 இல் 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வுயர்வு ஜனவரி 1 2013 முதல் அமலுக்கு வந்தது.