"சரிந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு உயர்தர உணவகங்களில் உணவு உட்கொள்ளும் ஆர்வத்தை குறைத்துள்ளது " என்ற தலைப்பின் மீதான அஸ்ஸோசாமின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது, அஸ்ஸோசாமின் செக்ரெட்டரி ஜெனரலாகிய திரு டி.எஸ். ராவத், "ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை உயரச் செய்துள்ளதனால், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர உணவகங்கள், தங்களின் உணவு அட்டவணை விலையை புதுப்பிக்கத் தலைப்பட்டுள்ளன. இதனால் இத்தகைய உணவகங்களில் உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து வருகிறது." என்று கூறியிருக்கிறார்.
பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் சந்தையில் மலிந்திருக்கும் தற்போதைய நிலையில், உயர்தர உணவகத் துறை தன் வசீகரத்தை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
அஸ்ஸோசாமின் கணக்கெடுப்புத் தகவலறிக்கையின் படி, பிரதான பெரு நகரங்களான டெல்லி-என்ஸிஆர், மும்பை, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத் போன்றவற்றில் உள்ள உணவகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவீத சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய அயல்நாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதினால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் சுமார் 30-35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாகவும் அஸ்ஸோசாமின் இந்த ஆய்வறிக்கை, தகவல் அளிக்கிறது. சில உணவகங்கள் தங்களது தனிமுத்திரை கொண்ட உணவு வகைகளைத் தயாரிக்கத் தேவையான 85 சதவீதப் பொருட்களை ஜப்பான், பிரெஞ்சு-இத்தாலியன், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.