கோல்டு ஃபியூச்சர்ஸ் விலை 32,600 ரூபாயை தொட்டு வரலாறு காணாத உயரத்தை இந்த வாரம் அடைந்தது. இதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் உச்ச விலையை தொட்டது. இந்த விலை உயர்வுக்காக முழு முதற்காரணம் மலை முகட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி பாய்ந்து வரும் நதி நீரைப்போல தொடர்ந்து சரிந்து வரும் ரூபாய் மதிப்பே ஆகும்.
எப்போதெல்லாம் வர்த்தக சந்தையில் பயமும், பீதியும், கவலையும் எட்டிப்பார்க்கிறதோ அப்போதெல்லாம் தங்க முதலீடு பாதுகாப்பானதாகும்.
சிரியா மீதான அமெரிக்காவின் போர்
தங்கை நகை விலையில் பல்வேறு மாற்றங்களும் காட்சிகளும் அரங்கேறும் மாதமாக செப்டம்பர் மாதம் இருக்கப்போகிறது. அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சிரியா நாட்டின் மீது இராணுவ தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் செப்டெம்பர் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்க சகல வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. எவ்வளவு நாட்கள் இராணுவ தாக்குதல் நீடிக்கிறதோ, அத்துனை நாட்களுக்கும் தங்க விலை உச்சாணிக் கொம்பிலே இருக்கும்.
85 பில்லியன் மதிப்புள்ள கடன் பத்திரங்கள்
அமெரிக்க மத்திய வங்கியின் திறந்தவெளிச் சந்தை குழு செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், கடன் பத்திரங்களை கொள்முதல் குறைப்பு தொடர்பாக முடிவுகளை எடுக்கக்கூடும். அமெரிக்க மத்திய வங்கி மாதந்தோறும் 85 பில்லியன் மதிப்புள்ள கடன் பத்திரங்களை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக வாங்குகிறது. இவ்வாறு வாங்குவத்தின் மூலம் நிதிச்சந்தையில் பணப்புழக்கம் அதிகமாகி, பங்குச்சந்தைகளிலும் தங்கத்தின் மீதும் முதலீடாக மாறுகிறது. இந்த பணப்புழக்கத்தை குறைத்தால், தங்கத்தின் விலை மேலும் குறையக்கக்கூடும்.
ரூபாயின் மதிப்பு
இந்தியாவில் ரூபாயின் ஓட்டத்தைப் பொறுத்தே தங்கவிலையும் இருக்கும். ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்தால், தங்க விலை தொடர்ந்து உயரத்திலே இருக்கும். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், இந்தியர்களுக்கு தங்கம் குறைந்த விலையில் கிடைக்ககூடும்.
அதிரடி காட்சிகள் நிறைந்த செப்டம்பர் மாதம்
எப்படி நோக்கினும் செப்டம்பர் மாதம் தங்கத்திற்கு அதிரடி காட்சிகள் நிறைந்த மாதமாகவே இருக்கும் என்பது உறுதி. தங்கம் என்னும் குதிரை, எத்திசை நோக்கி செல்லும் என்பது புரியாதே புதிராகவே இருக்கிறது.