சென்னை: இந்திய பொருளாதாரம் கடந்த சில வாரங்களாக முன்னேற்றத்தை கண்டு வருவது உண்மை தான். ஆனால் இந்த முன்னேற்றம் எவ்வளவு துரம்?, ஒரு வருடத்திற்கு முன்னல் சென்றால் இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு பதிலாக ப.சிதம்பரம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்ததும், இந்திய பங்குச் சந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தன, சில பல ஏற்றமும் கண்டன.
மிகச்சிறப்பான சாதனைகள் புரிந்தவர் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை துணிச்சலாக எடுக்கக்கூடியவர் மற்றும் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டே அரசியல்வாதி என்று பங்குச்சந்தை வட்டாரங்களில் சிதம்பரம் புகழ் பரவி இருந்தது. ஆனால் ஒரு வருடம் கழிந்த இன்றைய நிலைமையில், நாம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம்.
அவை அதல பாதாளத்தைத் அடைந்து விட்ட ரூபாய் மதிப்பு, மண்ணுக்குள் புதைந்து விட்ட மொத்த உள்நாட்டு வளர்ச்சி, விண்ணைத் தொட்டுவிட்ட பணவீக்கம் மற்றும் இந்தியாவின் கடன் வாங்கும் சக்தியை குறைக்க தயாராக காத்திருக்கும் பன்னாட்டு தரகு நிறுவனங்கள் போன்ற எதிர்மறை விஷயங்கள் பல நடந்தேறியுள்ளன. இந்த சூழலில் ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். பதவிகள் வேறு என்றாலும் சூழ்நிலைகள் ஒப்பானதே. எனவே ரகுராம் ராஜன் நியமனம் பற்றிய செய்திகளால் இந்திய வர்த்தக சந்தை தலைவிரித்து ஆடக்கூடாது என்பதற்கான காரணங்களை இங்கே அடுக்கியுள்ளோம்.
அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகள்
அமெரிக்க மத்திய வங்கி (Federal bank) தனது கடன் பத்திரக் கொள்முதல் குறைப்புத் திட்டத்தைப் பற்றிய செய்தியோ அல்லது பேச்சு வெளிவரும்போது எல்லாம் உலகளவில், வளரும் நாடுகளின் நாணயச் சந்தைகள் தள்ளாட்டம் கண்டன. அவ்வாறு ஒரு நடவடிக்கை எடுக்கப்படுமெனில் உலகமெங்கும் பணப்புழக்க குறைபாடு ஏற்படும். ஏற்கனவே இந்தியா, இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ந்து கிடக்கின்றன. செப்டம்பர் 19ஆம் தேதி அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் கடன் பத்திரக் கொள்முதல் குறைப்புத் திட்டத்தின், எந்த ஒரு சிறு நடவடிக்கையும் உலகளாவிய சந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வீழ்ந்துவரும் இந்திய பொருளாதாரம்
பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு என சகல திசைகளிலும் இந்தியாவிற்கு கடுமையான சாட்டையடி விழுந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் பலவீனமான நோயாளியைப் போன்றுள்ளது. சமிபத்தில் வெளியிடப்பட சேவைத்துறையின் (Service sector) செயல்பாட்டு புள்ளிவிவரங்கள் அத்துறை நான்கு ஆண்டுகளாக காணாத வீழ்ச்சியை இந்த ஆண்டு கண்டுள்ளது என தெரிவிக்கிறது. பணவீக்கமும் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சுருங்கி வருகிறது.
சிரியாவை சூழும் போர்மேகம் ஆபத்தானது
சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியாக இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. நீண்ட நாட்களுக்கு தாக்குதல் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொடும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். ஆகமொத்தம் இது சந்தைக்கு நல்லதல்ல.
கவலை தரும் புறக்காரணிகள்
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையின் காரணமாக அதிகமான அன்னிய செலாவாணியை நாம் செலவழிக்க வேண்டியிருக்கும். அது ரூபாயின் மீதான சுமையை அதிகரிக்கும். அத்துடன் அமெரிக்க மத்திய வங்கியின் கடன் பத்திரக் கொள்முதல் குறைப்புத் திட்டமும் சேர்ந்துகொள்ளும் போது, நிலைமை நம் கட்டுப்பாட்டில் இல்லை எனவே தோன்றுகிறது.
இக்கரைக்கு அக்கரை பச்சை
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கடன் பத்திர வட்டி விகிதம் கிட்டத்தட்ட மூன்று சதவிதத்தை தொடும் நிலையில் உள்ளது. இச்செய்தி இந்தியச் சந்தையின் காதில் இரும்பை காய்ச்சி ஊற்றுவதைப் போன்று உள்ளது. அவ்வாறு வட்டி விகிதங்கள் உயரும் பட்சத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் இருந்து முதலீடுகள் அமெரிக்காவை நோக்கி செல்லும்.