சென்னை: நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஐ-கேட் கார்ப்பரேஷன், அதன் புதிய தலைமை நிர்வாக இயக்குனர் அசோக் வேமுரிக்கு சம்பளமாக 1.3 மில்லியன் டாலரும் (8.2 கோடி) 1 மில்லியன் (6.3 கோடி) அளவிற்கு செயல்திறன் அடிப்படையில் போனசும் அளிக்கப் போகிறது என்று பங்கு சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு ஐ-கேட்டில் சேர்ந்துள்ள வேமுரிக்கு போனசுடன் சேர்த்து 1,50,000 ஆப்ஷன் பங்குகளும் வழங்கப்படுகிறது. அவர் வேலையில் சேர்ந்து ஒரு வருடத்தில் 25 % பங்குகளுக்கு உரிமை அளிக்கப்படும். அதே போல் மிச்சமிருக்கும் பங்குக்களுக்கும் 3 அடுத்த வருடத்தில் உரிமை அளிக்கப்படும்.
அசோக் வேமுரி
இன்போசிஸ் நிறுவனத்தில் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவரான இவருக்கு அந்நிறுவனம் மேலும் 1,00,000 கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 25% பங்குகளுக்கு உரிமம் வழங்கப்படுவதால் நான்கு வருட முடிவில் முழுவதற்கும் உரிமை அளிக்கப்பட்டு விடும். இன்போசிஸ் நிறுவனத்தில் அவருக்கு 9,00,000 டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டது.
வேமுரியின் இலக்கு
400 மில்லியன் டாலராக உள்ள ஐ-கேட்டின் ஈ.பி.ஐ.டி.டி.ஏ (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தீர் நிதிக்கு முன்னாள் ஈட்டிய வருமானம்) இலக்கு, ஜூன் 30, 2017-ஆம் வருடத்திற்குள் 500 மில்லியன் டாலராக உயர்ந்தால் அதற்கேற்ப அவரின் பங்கிணைந்த ஈட்டுத் தொகை அதிகரிக்கப்படும்.
கண்ணா லட்டு திண்ண ஆசையா!!
ஒரு வேளை அவர் 400 டாலர் இலக்கை அடைந்து விட்டால் அவருக்கு கூடுதலாக 3,00,000 பங்குகள் வழங்கப்படும். இதுவே இலக்கு 500 டாலர் மில்லியனை தொட்டு விட்டால் இரண்டு மடங்கு அதிக பங்குகள் வழங்கப்படும்.
சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஒப்பந்தம்
"இது சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஒப்பந்தமாகும். இதுவே சில வருடங்களுக்கு முன் என்றால், இந்த ஒப்பந்தம் தனித்துவம் பெற்ற ஒப்பந்தமாக இருந்திருக்கும். ஆனால் இன்றோ இது சாதரணமாகி விட்டது. செயல்திறன் மற்றும் நிறுவத்தின் இலக்கை அடைவதை பொறுத்து போனஸ் நிர்ணயிக்கப்படுவது சிலிகான் வேலி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி முதலீட்டார்கள் அடங்கிய நிறுவனங்கள் மத்தியில் பொதுவாக நடக்கும் ஒன்று." என்று ஹெட்ரிக் & ஸ்ட்ரக்கில்ஸ்
(Heidrick & Struggles) நிறுவனத்தின் நிறுவன முதல்வர் திரு. சி.கே. குருபிரசாத் கூறியுள்ளார்.
பனீஷ் மூர்த்தி
முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் பனீஷ் மூர்த்திக்கு பதில் வேமுரியை தேர்ந்தெடுக்க இ-கேட் நான்கு மாத தீவிர வேட்டையில் ஈடுபட்டது. பனீஷ் மூர்த்தி தன் பணியாளருடன் தவறான உறவில் ஈடுபட்டதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டவர். ஐ-கேட் நிறுவனத்தை விட 2 மடங்கு பெரிய நிறுவனமான பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை 2011-ஆம் ஆண்டு, அந்நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கும் போது பனீஷ் மூர்த்தி தான் வழிநடத்தினார்.