சென்னை: டிசிஎஸ் நிறுவனம் சவுதி அரேபியாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் வணிக செயலாக்க அயலாக்க (பிபிஓ) மையத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தை அமைக்கும் பணியில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் டிசிஎஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் 3,000 பெண்களுக்கு வேலை அளிக்க முடியும் என டிசிஎஸ் நிறுவனம் மகிழ்ச்சியாக தெரிவித்தது.
இப்புதிய நிறுவனத்தில் பங்கிட்டில், டிசிஎஸ் நிறுவனம் 76 சதவிகித பங்குகளும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் 24 சதவிகித பங்கு விகிதங்களுடன் செயல்படும் என கடந்த செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.
டிசிஎஸ்யின் ரியாத் மையத்தில் முதல் கட்டமாக சவுதி பெண்களை பணியமர்த்தப்படும், மேலும் இத்தளத்தில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இம்முயற்சி சவுதி அரேபியாவில் பிபிஓ துறையை உருவாக்கவும், வளர்க்கவும் வழி செய்யும் என அந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்தது.
இதை பற்றி டாடா குழுமத்தின் தலைவர், சைரஸ் மிஸ்ட்ரி கூறுகையில் "டாடா குழுமம் எப்பொழுதும் பெண்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் துண்டுகோளாகவே இருக்கும், இதன் வெளிப்பாடே சவுதி அரேபியாவின் இப்புதிய நிறுவனம். மேலும் இதில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் பணிபுரிய மகிழ்ச்சியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.