நீங்கள் பணத்தை நிலையான வைப்பு நிதியில் முதலீடு செய்ய விரும்பினால், குறைந்தது ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்பது நல்லது. இதற்கான காரணம் மிக எளிது. கடந்த வெள்ளியன்று, ஆர்பிஐ 0.25% ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. ஆர்பிஐ, வர்த்தக வங்கிகளுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும். ரெப்போ விகிதம் உயரும் போது வங்கிகள், கடன் மற்றும் வைப்புக்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.
வங்கிகள் கண்டிப்பாக வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், வட்டி விகிதத்தை உயர்த்துவது பற்றி ஆலோசிப்பதாக வங்கிகள் கூறுகின்றன. வட்டி விகிதம் பற்றி தீர்மானிப்பதற்கு, வங்கியின் சொத்து பொறுப்பு குழு, இரண்டு நாட்கள் கூடும் என பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் பிரதிப் செளத்ரி கூறியுள்ளார்.
மேலும் அவர் பொதுவாக பருவகாலத்தில் வங்கிகள் அதிகளவு கடன் வழங்க வேண்டிய இருக்கும், இதனால் வங்கிகள் கடன் வழங்குவதற்கு பணம் பெறவேண்டிய தேவை உள்ளதால், வைப்பு நிதிகள் மீதான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் வங்கிக்கு உள்ளது என அவர் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி, வைப்புகள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தினால், ஏனைய வங்கிகளும் இதைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை.
ஆர்பிஐ நடவடிக்கைகள்
முன்னதாக, ஆர்பிஐ-யின் டைட்னிங்க் மெஷர்ஸ் குறுகிய காலம் மட்டுமே இருந்தது. ஆனால், ரெப்போ விகித உயர்வினால், குறுகிய கால நிதி திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என ஆர்பிஐ எதிர்பார்க்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. உயர் பணவீக்கம் மற்றும் குறைந்த சேமிப்பு வளர்ச்சி ஆகியவையே வட்டி விகித உயர்வுக்கு சில காரணம் என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.
நீண்ட கால முதலீடு
ஆகவே, நீங்கள் வைப்பு நிதிகளில், குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்பினால், குறைந்தது ஒரு வாரகாலம் காத்திருப்பது மிகச் சிறந்தது. குறிப்பாக இது கடன் வழங்குவதற்கான முக்கிய காலமாக இருப்பதாலும் மற்றும் ஆர்பிஐ ரெப்போ விகிதங்களை உயர்த்தி உள்ளதாலும், வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது சாத்தியமாகும்.
நீண்ட கால முதலீடே சிறந்தது
மேலும், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது உகந்தது, ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உங்கள் பணம் லாக் செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் முதலீட்டு திட்டத்தில் அதிகளவு வட்டி வருமானத்தைப் பெற முடியும்.