சென்னை: ஆதார் எண்ணை வைத்து தனி நபரின் கடன் வரலாறுகளை திரட்ட வேண்டும் என்று சில வாரங்களாகவே ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி வருகிறார். அதனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு கடன் கொடுக்கவும், சேமிப்பு கணக்கு தொடங்கவும் ஒரு வங்கி முதன் முதலாக தனித்துவமான அடையாளத்தை கொண்ட ஈ.கே.ஒய்.சி (எலெக்ட்ரானிக் - நோ யுவர் கஸ்டமர்) அமைப்பை கொண்டு வந்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி
வீசா நெட்வொர்க் நிறுவனத்தை பயன்படுத்தி ஆதார் டேட்டாபேசிற்கு நுழைவுரிமை பெற்று, இந்த ஈ.கே.ஒய்.சி வசதியை தன்னுடைய 25 கிளைகளில் அடுத்த வாரம் தொடங்குகிறது ஆக்ஸிஸ் வங்கி. இந்த கிளைகள் இனி கடன் மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்கு அடையாள சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழை பெறுவதற்கு பதில் ஆதார் எண்ணையும் கைரேகையையும் பெற்றுக் கொள்ளும்.
ஈ.கே.ஒய்.சி என்றால் என்ன??
ஈ.கே.ஒய்.சி. என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் அலுவல் முறை ஏற்புடைய ஆவணமாகும் என்று ஆர்.பி.ஐ செப்டம்பர் 2-ஆம் தேதி தெரிவித்துள்ளது. இந்த வசதியினால் ஆதாரில் பதிந்த நபர் இந்தியாவிலுள்ள எந்த வங்கி கிளைகளுக்கு வேண்டுமானாலும் சென்று தன்னுடைய ஆதார் எண்ணையும் கைரேகையையும் வைத்து வங்கி கணக்கு திறந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டின் பயன்
ஆதார் டேட்டாபேஸ் வெறுமனே உங்களின் முகவரி சான்று, அடையாள சான்று மட்டும் புகைப்படத்தை மட்டும் அளிக்காமல் அதனுடன் சேர்த்து வங்கியின் டேட்டாபேஸ் மூலம் விண்ணப்பதாரரின் தொர்பு தகவல்களையும் அளிக்கும். "இனி சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டி பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவத்தில் அதிக தகவல்களை நிரப்ப தேவையில்லை." என்று ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் கூறியுள்ளார். இருப்பினும் கடன் விஷயங்களில் வங்கிகள் கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈ.கே.ஒய்.சி. சேவை
"நடுத்தர வர்கத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஈ.கே.ஒய்.சி. சேவை வசதியை ஏற்படுத்தி கொடுத்தாலும் கூட, கீழ்தட்டு மக்களுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் பயனை அளிக்கும்," என்று ஸ்ரீதரன் கூறியுள்ளார். மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் குடி பெயர்ந்து வேலை செய்பவர்களுக்கு வங்கி தொடங்கும் போது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த ஈ.கே.ஒய்.சி. சேவை அவர்களுக்கு பெரிதும் உதவும். சிறிய சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு கையெழுத்திட்ட உங்களின் புகைப்படமும் படிவத்தில் உங்கள் கையெழுத்தும் இருந்தால் போதும் என்று ஆர்.பி.ஐ கூறியுள்ளது.
கால இடைவெளியில் புதுப்பித்தல்
தனி நபர் தன் வீட்டை மாற்றும் போது அந்த தகவல்களை ஆதார் குழு தன்னுடைய டேட்டாபேஸில் புதுபித்துக் கொள்ளும் என்று ஸ்ரீதரன் கூறியுள்ளார். இதனால் காலாந்தர சோதனை மேற்கொள்ளப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கி கணக்கை ஈ.கே.ஒய்.சி. செயல்முறை மூலம் தொடங்கினாலும் தொடர்பு தகவலை கே.ஒய்.சி. ஆவணங்கள் மூலம் புதுப்பித்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
சில்லறை வர்த்தகத்தில் இது புரட்சி!!!
செப்டம்பர் 4 முதல் பொறுப்பேற்றுள்ள ஆர்.பி.ஐ கவர்னர், "சில்லறை வர்த்தகத்தை பொருத்தவரை, தனி நபர் கடன் வரலாற்றை திரட்ட தனித்துவ அடையாள அட்டையாள ஆதாரை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் இது புரட்சியை ஏற்படுத்த அடித்தளமாக விளங்கும்." என்று கூறியுள்ளார்.