இனி வரும் காலங்களில் ஆதார் அட்டைகள் வங்கி கணக்குடன் இணைக்கப்படும் என்று இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளதாக ஊடகங்களின் அறிக்கை தெரிவிக்கிறது.
"இன்னும் ஒரு வருட காலத்திற்குள் 10 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார். ஆதார் எண்கள் வைத்திருப்பதால் வாடிக்கையாளர்களின் வசதி வாய்ப்பு இன்னும் மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"நமக்கு எதற்கு ஆதார் எண் என்று மக்கள் நினைக்கின்றனர். எங்கள் பார்வையின் அடிப்படையில், ஆதார் எண்களால் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும்." என்று ஆதார் எண்ணை வங்கி சேவையுடன் இணைக்கும் அறிமுக விழாவில் நிலேகனி இதனை தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையை பல செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். அது நம் வாழ்க்கையை சுலபமாக்கும், பொது வசதிகளுடன் சுலபமான தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கும், பண பறிமாற்றம், என அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பொதுநல பயன்களை பெறுவதற்கும் சமையல் வாயுக்கான சப்சிடி பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க பெட்ரோலிய அமைச்சகம் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இருப்பினும், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை பற்றி தன் கருத்தை கூற மறுத்து விட்டார் நிலேகனி. இந்த விஷயம் நீதிமன்ற விசாரணை நிலையில் உள்ளது என்று மட்டும் கூறியுள்ளார். மேலும் இந்திய தேசிய அடையாள ஆணையத்தின் மசோதாவை நிறைவேற்றி விட்டது யூனியன் காபினெட். இது ஆதார் ஆணையத்திற்கு சட்டப்படியான அந்தஸ்தை கொடுக்கும்.