சுவிஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் பற்றிய விவரங்களை கோரும் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு நிகழ்வாக கடந்த செவ்வாய் கிழமையன்று ஸ்விட்சர்லாந்து நாடு தன்னுடைய வங்கிகளில் வெளி நாட்டினர் குவித்து வைத்துள்ள பணம் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ள ஒப்புகொண்டுள்ளது.
இதைஅடுத்து, சுவிஸ் வங்கிகளை சுற்றியிருந்த இரும்புத்திரை கிட்டத்தட்ட விலக ஆரம்பித்துள்ளதாக கருதலாம். இந்த நடவடிக்கையின் மூலமாக தன்னிச்சையான தகவல் பகிர்வு, தகவல் பரிமாற்றம், வரி வசூல் உதவி பரிவர்த்தனை மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகளில் பரஸ்பர உதவி உட்பட அனைத்து வகையான தகவல்களையும் ஸ்விட்சர்லாந்து அளிக்கும்.
உள்நாடுகளில் வரி ஏய்ப்பு செய்து, அதன் மூலம் சட்டவிரோதமாக கள்ளப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் தொகை பற்றிய தகவல்களைத் தருமாறு உலகளாவிய அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
சர்வதேச நாடுகள்
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, கடந்த செவ்வாய் கிழமை வரி விஷயங்களில் பரஸ்பர நிதி நிர்வாக உதவி பற்றிய பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் பலதரப்பு ஒப்பந்தத்தில் ஸ்விட்சர்லாந்து நாடு கையெழுத்திட்டது .இந்தியா உட்பட 58 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் அனைத்து நாடுகளுக்கு மத்தியில் தகவல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை பகிர்ந்து அளிக்க வழிவகை செய்கிறது.
9,000 கோடியாக சரிவு
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, ஒரு வருடத்திற்கு முன்பு 14,000 கோடி ( 2.18 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்) அளவிற்கு இருந்த இந்தியர்களின் மொத்த நிதி, 2012 ஆம் ஆண்டின் இறுதியில் வரலாறு காணாத அளவிற்கு குறைந்து 9,000 கோடி (1.42 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்) மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது.
1.5 டிரில்லியன் டாலராக சரிவு
அதைப்போல, சுவிஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த தொகையும் சரிவையே சந்தித்துள்ளது. ஒரு ஆண்டிற்கு முன்பு 1.65 டிரில்லியன் என்ற அளவில் இருந்த அத்தொகை 2012 ஆண்டின் போது 1.5 டிரில்லியன் டாலராக சரிந்தது.
தகவல் பரிமாற்றம்
"இந்த உடன்படிக்கை மூலம் தகவல் பரிமாற்ற வாய்ப்பு ஏற்படும், அதே வேளையில், தகவல் உதவி தேவைப்படும் நாடுகளிடையேயான உடன்பாடும் தேவைப்படும்" என OECDயின் பலதரப்பு ஒப்பந்தத்தில் ஸ்விட்சர்லாந்து கையொப்பமிட்டதை அறிவித்த OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) கூறியது.
ஜி 20
"ஜி 20 நாடுகளின் ஆதரவுடன், உலக நாடுகளின் இடையே தானியங்கி தகவல் பரிமாற்றம் பற்றிய புதிய சர்வதேச தரம் உருவாகி வருகிறது மற்றும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டதின் மூலம் ஸ்விட்சர்லாந்து நாடும் உரிய நேரத்தில் இதன் அதிகார எல்லைக்குள் சேருவதின் மூலம் தானாக முன்வந்து நிதிசார்ந்த தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்" என OECD தெரிவித்துள்ளது.
சுவிஸ் மத்திய கவுன்சில்
சுவிஸ் நாட்டின் கொள்கையை வடிவமைக்கும் அமைப்பான சுவிஸ் மத்திய கவுன்சில், கடந்த அக்டோபர் 9ஆம்தேதி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. OECDயின் தலைமை-செயலாளர் ஏஞ்சல் குரியா, "இந்த உடன்படிக்கையை ஸ்விட்சர்லாந்து நாடு பின்பற்றுவதின் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பான உலகளாவிய மன்றத்தின் சரியிணை ஆய்வில் (Peer Review) அடையாளங்காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்" என்றார்.
குறைபாடுகள்
வரித்தகவல் தொடர்பான உலக நாடுகளின் கோரிக்கைகளை கையாளுவதில் சுவிச்சர்லாந்து நாட்டின் வழிமுறைகளில் உள்ள குறைபாடுகளை சரியிணை ஆய்வு கண்டறிந்து சுட்டிக்காட்டியது.
வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு
மார்ச் 2009 முதல் வரி விஷயங்களில் சர்வதேச தரத்திற்கு உட்பட்டு செயல்பட சுவிட்சர்லாந்து உறுதி கொண்டுள்ளதாக OECDயின் ஸ்விட்சர்லாந்து தூதுவர் ஸ்டீபன் பிளுச்கிகேர் கூறினார். " உடன்படிக்கையில் கையெழுத்திட்டதின் மூலம் வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பிற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைக்கு ஆதரவாக ஸ்விட்சர்லாந்து நாட்டின் பொறுப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதே வேளையில் நாட்டின் நிதி மையத்தின் ஒருமைப்பாடு மற்றும் நற்பெயர் காத்தலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது " என்றும் அவர் கூறினார் .
கையெழுத்திட்ட நாடுகள்
கனடா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, ரசியக் கூட்டமைப்பு, சவுதி அரேபியா, சிங்கப்பூர் , தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.ஸின்ட் மார்டீன் , கேமன் தீவுகள் , மொன்செராட் மற்றும் துர்கசு கைகோசு தீவுகள் போன்ற பகுதிகளும் இந்த உடன்பாட்டில் அதிகார எல்லைக்குள் அடங்கும்.
இந்தியா...
இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் பணம் 2006 ஆம் ஆண்டு முதல் குறைந்து வருவதாகவும் மற்றும் 2006-2010 காலகட்டத்தில் 14,000 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக, இந்திய அரசு கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கறுப்பு பணம் தொடர்பான அறிக்கையில் தெரிவித்தது.