வாஷிங்டன்: சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 2.278 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊதியத்தொகையைப் பெற்று, கார்ப்பொரேட் ஊதியத்தில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளதாக கார்ப்பொரேட் நிர்வாக நிறுவனத்தின் சர்வே கூறுகிறது.
ஜிஎம்ஐ ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜுக்கர்பெர்க்கின் சம்பளமான 5,03,000 டாலர் மற்றும் போனஸ் தொகையான 2,66,000 டாலர், இவை மட்டும் அல்லாமல் சுமார் 2.27 பில்லியன் பெறுமானமுள்ள பங்கு ஆப்ஷன்களின் விஸ்தீரணத்தின் கீழ் இவரது ஊதியம் சுத்தமாக மறைந்து போய் விட்டதை உணர்த்துகிறது.
இத்தனை ஆண்டுகளில், இது போன்ற சர்வேயில் தலைமை நிர்வாகி ஒருவர் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊதியத்தைப் பெறுவது தெரிய வந்துள்ளது இதுவே முதல் முறை என்று கடந்த திங்களன்று வெளியிடப்பட்டுள்ள ஜிஎம்ஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 பில்லியன் டாலர்
2012 ஆண்டின் போது, மற்றொரு சிஇஓ-வின் ஊதியமும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்துள்ளது. ஆமெரிக்காவின் எரிசக்தி துறையின் ஜாம்பவானாகிய கிண்டர் மார்கனைச் சேர்ந்த ரிச்சர்ட் கிண்டருக்கு சுமார் 1 பில்லியன் டாலர் சம்பளமும், சுமார் 1.1 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள பங்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
இருட்டடிப்பு செய்யப்பட்ட சம்பளம்
இவர்கள் இருவரின் புகழ் வெளிச்சத்தில் இதர சிஇஓ-க்களின் சம்பளம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். இந்த பட்டியலில் சுமார் 255 மில்லியன் டாலர் ஊதியம் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளவர் சிரியஸ் எக்ஸ்எம் ரேடியோவின் மெல் கர்மாஸின் ஆவார். இவரைத் தொடர்ந்து லிபர்ட்டி மீடியாவைச் சேர்ந்த க்ரிகோரி மாஃபேய் (254 மில்லியன் டாலர்) மற்றும் ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்த டிம் குக் (143 மில்லியன் டாலர்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
வட அமெரிக்க நிறுவனங்கள்
மேலும் கடந்த நிதியாண்டில் வட அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,259 பொது வர்த்தக நிறுவனங்களின் சர்வேயில், சம்பள விகிதம் சுமார் 8.47 சதவீதம் வரையிலான நடுத்தர வரம்பைக், கடந்து உயர்ந்திருப்பதாக ஜிஎம்ஐ கூறுகிறது.
19.65% உயர்வு
ஸ்டாண்டர்ட் மற்றும் புவர்'ஸ் 500 இன்டெக்ஸில் இருக்கக்கூடிய நிறுவனங்களின் ஊதிய அளவு, நடுத்தர அளவிலிருந்து சுமார் 19.65% வரை உயர்ந்துள்ளது.
பத்தாண்டுகளின் சாதனை
"ஜிஎம்ஐ இத்தகைய அறிக்கையை கடந்த பத்து ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது, இது போன்ற கணிசமான உச்சபட்ச ஊதியம் வாங்கக்கூடிய தலைசிறந்த பத்து நபர்களின் பட்டியலை இதுவரை கண்டதில்லை." என்று அவ்வறிக்கையை சமர்ப்பித்த க்ரெக் ரூயெல் தெரிவித்துள்ளார்.
பங்குகள்
"நடப்பு ஆண்டின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்நிறுவனங்கள், பங்குதாரர்களின் ரிட்டர்ன்களைப் பொறுத்தவரை, கடந்த மூன்று மற்றும் ஐந்து வருட காலகட்டங்களின் போது மிகச் சிறப்பாக பணியாற்றியிருந்தாலும் கூட, மேற்கூறிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஈக்விட்டி பரிமாணம் மற்றும் அளவு ஆகியவையே அவர்களின் ஊதியம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரக் காரணம் ஆகும்." என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊதிய உயர்வின் காரணம்
இந்த கணிசமான ஊதியங்கள் பொதுவாக தலைவர்களுக்கு அளிக்கப்படும் பங்கின் மூலமே இது சாத்தியமாகியுள்ளன. வழக்கமாக இந்த பங்குகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் பங்குகளை வாங்கி, அவற்றை லாபகரமாக விற்க சிஇஓக்களை அனுமதிக்கக்கூடிய வாய்ப்புகளுடன் காணப்படுகின்றன.
பங்கின் விலை 6 செண்ட்
2005-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டில் முழுமையாக உரிமை வழங்கப்பட்ட 60 மில்லியன் பங்கு ஆப்ஷன்களை, ஜுக்கர்பெர்க், தற்போது வெறும் 6 செண்ட்கள் என்ற அதிரடி விலையில் செயல்படுத்தி உள்ளார் என்று ஜிஎம்ஐ கூறியுள்ளது.
2.7 பில்லியன் டாலர்
2012 ஆண்டு மே மாதத்தின் போது ஃபேஸ்புக்கை பொது பரிவர்த்தனைக்கு கொண்டு வந்த போது ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வண்ணம் ஜுக்கர்பெர்க்கின் மதிப்பு 2.7 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது.