பெங்களூரு: இந்தியா இன்னோவேஷன் ஃபண்ட் மற்றும் ஆக்ஸல் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டாளர்களுடன் சேர்ந்து டாடா கேபிடல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் டாடா இன்னோவேஷன்ஸ் ஃபண்ட், பெங்களூரில் உள்ள புற்றுநோய் மருத்துவ சேவை மையமான மித்ரா பயோடெக்கில் சுமார் 40 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.
புற்றுநோய்க்கான பிரத்யேக சிகிச்சை வழங்கி வரும் இம்மருத்துவ மையம், இந்த ஒப்பந்தத்தினால் சுமார் 200 கோடி ரூபாய் பெறுமானமுள்ளதாக மதிப்பேற்றம் பெறும் என்று இந்த பரிவர்த்தனையைப் பற்றிய அம்மையத்தின் முக்கிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஸ்ஸாச்சூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) மற்றும் ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் (HMS) ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்றினால் நிறுவப்பட்ட மித்ரா பயோடெக் நிறுவனம், முதலில் ஆக்ஸல், இந்தியா இன்னோவேஷன் ஃபண்ட் மற்றும் கர்நாடகாவை பின்புலமாகக் கொண்ட ஃபண்டான கித்வென் ஆகியவற்றிலிருந்து சுமார் 30 கோடி ரூபாயை 2010 ஆம் ஆண்டின் போது வென்சர் ஃபண்டாகப் பெற்றுள்ளது.
"சந்தையில் எங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருப்பதற்கு இந்த முலதனமே சான்றாகும்." என்று மித்ரா பயோடெக்கின் தலைமை நிர்வாகியான மல்லிகார்ஜுன் சுந்தரம் கூறியுள்ளார். மித்ரா பயோடெக் தற்போது நாட்டின் தலைசிறந்த புற்றுநோய் இன்ஸ்டிட்யூட்களுடன் இணைந்து நோயாளிகளுக்கு அனுகூலமான மருந்து அல்லது மருந்துகளின் கலவையை தீர்மானிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.