பெங்களூரூ: மதுபான சக்கரவர்த்தி விஜய் மல்லையா மீதும், அவருக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீதும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் அளித்த கிரிமினல் புகாரின் பேரில், FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது. பயனாளி வளர்ச்சி மற்றும் பயணர் சேவை கட்டணங்களை விமான நிலையத்திற்கு கட்டாத காரணத்தினாலேயே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"விஜய் மல்லையா மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீது நாங்கள் FIR பதிவு செய்துள்ளோம்..." என்று காவல்துறை உதவி ஆணையர் திரு.கமல்பண்ட் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 21-ஆம் தேதி BIAL (பெங்களூரு சர்வதேச விமான நிலையம்) அளித்த புகாரின் பேரில், இங்குள்ள மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், BIAL காவல் நிலையத்தை FIR பதிவு செய்ய ஆணையிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்ற ஆணையை அவர்கள் நேற்று பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
BIAL அளித்துள்ள கிரிமினல் புகாரில், இந்தியன் பீனல் கோட்டின் படி, 403 (சொத்துக்களின் நேர்மையற்ற கையாடல்), 406 (கிரிமினல் நம்பிக்கை மோசடி), 418 (ஏமாற்றுதல்) மற்றும் 120B (குற்றவியல் சார் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
2008-12 காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளிடம் இருந்து பயனாளர் வளர்ச்சி மற்றும் பயணிகள் சேவை கட்டணங்களை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வசூலித்துள்ளது. ஆனால் ஆரம்ப காலத்தில் இக்கட்டணத்தை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்தி வந்தது, பின்பு இத்தொகையை செலுத்த தவறியது என BIAL, டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனிடம் (DGCA) புகார் அளித்ததை தொடர்ந்து, DGCA-வின் கட்டளையின்படி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக BIAL தெரிவித்தது.
பயனாளர் வளர்ச்சி மற்றும் பயணிகள் சேவை கட்டணங்களை தனியார் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் வசூலித்து விமான நிலையம் இயக்காளரிடம் அளித்து விடும்படி செப்டம்பர் 22, 2008-ல் DGCA சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தங்களுக்கு 208 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது என்று BIAL தெரிவித்துள்ளது.