மும்பை: இனி புதிய வங்கிக் கணக்கை திறக்க பல பக்கங்கள் கொண்ட விண்ணப்பங்களை நிரப்ப அவசியமே இல்லை. ஆம், ‘ஆதார் அடையாள அட்டை' மூலமாக இனி இந்த வேலையை சுலபமாக முடித்துவிடலாம். ஆதார் அடையாள அட்டை வழங்கீட்டிற்கு பொறுப்பேற்றிருக்கும் அமைப்பான ‘யுஐடிஏஐ' (UIDAI) இனி எலக்ட்ரானிக் நடைமுறை மூலம் ஒருங்கிணைந்த தனிமனித பொருளாதார செயல்பாடுகளை நிறைவேற்றப்போகிறது. இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கப்போகும் அடுத்த முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
இந்த வசதி குறித்து விளக்கிய UIDAI தலைவர் நந்தன் நிலேகணி - எந்த ஒரு குடிமகனும் தனது 12 இலக்க ஆதார் அடையாள எண்ணை மட்டும் வைத்துக்கொண்டே ஒரு புதிய வங்கிக்கணக்கை சுலபமாக துவங்கிக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
ஒரு புதிய வங்கி கணக்கை துவங்க, வங்கி புதிய வாடிக்கையாளர் கொடுத்த அவரது 12 இலக்க என்ணை ஒரு ‘பேமெண்ட் கேட்வே' மூலமாக UIDAI நிர்வாக அமைப்புடன் சரிபார்க்கும். அப்போது வங்கிக்கு தேவையான அடிப்படை தகவல்கள் யாவுமே UIDAI தகவல் தளத்திலிருந்து (டேட்டாபேஸ்) கிடைத்துவிடும்.
இருப்பினும் புதிய வாடிக்கையாளர் தனது கைவிரல் ரேகைப்பதிவினை மட்டும் அந்த வங்கி கிளையில் வழங்க வேண்டியிருக்கும். பல்வேறு சான்றுகளின் பிரதிகளை அடுக்கி வழங்குவதைவிட இது மிகவும் எளிதான நடைமுறையாக இருக்கும் என்று நிலேகணி கூறினார். இன்றைய நவீன பணப்பரிவர்த்தனை யுகத்தில் இந்த வசதியின் சிறப்புகளைப் பற்றி அவர் விளக்குவதற்கு சிரமப்படவே வேண்டியதில்லை என்பதுதான் உண்மை. ஒரு சாமான்ய குடிமகனுக்கு இது போன்ற வசதிகள் எப்போது கிட்டும் என்பதுதான் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வந்திருக்கிறது.
எல்லா துறைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைந்த நடைமுறைகள் உருவாக்கப்பட்டு நவீன டிஜிட்டல் எலக்ட்ரானிக் தகவல் மேலாண்மையின் அடிப்படையில் ஒரு மேம்பட்ட பொருளாதார சூழல் உருவாகும் என்பது நிலேகணியின் கூற்று. சொல்லப்போனால் இந்த நடைமுறையின் மூலம் ஒருகாலத்தில் பணத்தாளின் பரிமாற்றமே அவசியமில்லாது போகும் என்றும் அவர் கூறுகிறார். இதைப்புரிந்து கொள்வதில் சிரமமும் இல்லை. அவரவர் பிரத்யேக அடையாளம் மற்றும் அவரது பணம் என்று ஒரு பிரம்மாண்ட ஒரு தகவல் தளத்தில் எல்லா விபரங்களும் இருக்கும்போது பணத்தாளின் தேவை குறையவே செய்யும். அதன் உச்சகட்டமாக பணமே தேவையில்லை - அனைத்துமே அவரவர் கணக்கில் எனும் நிலை உருவாகும்.
நான்கு வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்த UIDAI இந்திய அரசு அமைப்பிற்கு முன்னாள் ‘இன்ஃபோஸிஸ்' உப நிறுவனரான நந்தன் நிலேகணி தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது 460 மில்லியன் ஆதார் பிரத்யேக குடிமகன் எண்களை இந்த அமைப்பு வழங்கி முடித்திருக்கிறது. அடுத்த வருடத்திற்குள் 600 மில்லியன் ஆதார் எண்களை வழங்கிவிடவேண்டும் எனும் இலக்கை நோக்கி இது தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. (600 மில்லியன் எனும் இலக்கு இந்திய மக்கள்தொகையில் பாதி!)
பிரத்யேகமான ஆதார் எண்களை அடிப்படையாக கொண்டு நாட்டுக் குடிமக்களுக்கான மானியம், இதர உதவித்தொகைகள் மற்றும் தனிமனித பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை மொபைல் போன் மூலமாகவே முடித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் UIDAI தலைவர் வேறொரு தகவலையும் கூறுகிறார். அதாவது, ‘இ-கேஒய்சி (e-KYC - know your customer) எனும் நடைமுறை பல்வேறு விதங்களில் பலன் அளிப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். சமீபத்தில் தனியார்த்துறை வங்கியான ‘ஆக்ஸிஸ் பாங்க்' இந்த வகையிலான வங்கிக்கணக்கு துவக்கத்தை அமல்படுத்தியிருக்கிறது. தானே மாவட்டத்தை சேர்ந்த நிதின் ஷா என்பவர் முதன் முதலாக இந்த வசதியைப்பயன்படுத்தி புதிய வங்கிக்கணக்கை துவங்கியுள்ளார்.
"யார் வேண்டுமானாலும் வங்கிக்கு வந்து தங்கள் 12 இலக்க ஆதார் அடையாள எண்ணையும் விரல் ரேகைப்பதிவையும் அளித்து, உடனே வங்கிக்கணக்கை துவங்கிக்கொள்ளலாம்" - என்று ஆக்ஸிஸ் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாகியும் ஆன ஷிக்கா ஷர்மா இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் மற்ற வங்கிகளும் இந்த நடைமுறையில் பங்கேற்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இருப்பினும் மற்ற வங்கிகளில் இந்த நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்பது போன்ற கேள்விகளுக்கு நந்தன் நிலேகணி தெளிவான பதில் அளிக்கவில்லை. இனிமேல் இந்த இ-கேஒய்சி (e-KYC - know your customer) எனும் நடைமுறை பரந்த அளவில் விரிவுபடுத்தப்படும் என்று மட்டும் அவர் கூறினார். மேலும், இன்ஷ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றவற்றுக்கும் இந்த வசதி பயன்படும் என்றும் குறிப்பிட்டார்.