டெல்லி: ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்டால் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரான அஜித் சிங் அண்மையில், மக்களுக்கு சேவை வழங்கும் துறைகளான விமான நிறுவனங்கள் போன்றவற்ரில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பது என் கருத்து. 2021-ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள சுமார் 30,000 கோடி ரூபாய் வரையிலான ஈக்விட்டி இன்ஃப்யூஷன் நிறைவடைந்த பின்னர் அரசு மேற்கொண்டு நிதி எதுவும் ஒதுக்கப்போவதில்லை; அதனால், இனிமேல் ஆட்சிக்கு வரக்கூடிய எந்தவொரு அரசும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க தேவைப்படும் முயற்சிகளில் இறங்கியே தீர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் மத்திய அரசால் நடத்தப்படும் விமான சேவை நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா என்று ரத்தன் டாடாவிடம் கேட்கப்பட்ட போது, இத்திட்டம் நிறைவேறும் சந்தர்ப்பத்தில், அதனைக் கண்டு நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவோம் என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம், டாடா சன்ஸ் (தற்போது டாடா குழுமம்) நிறுவனத்தின் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு வரை, இது டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர், இது வரையறுக்கப்பட்ட பொதுவுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஏர் ஏஷியா இந்தியாவின் ப்ரொமோட்டரான டெல்ஸ்ட்ரா ட்ரேட்ப்ளேஸைச் சேர்ந்த அருண் பாட்டியா, டாடா சன்ஸ் நிறுவனம் எஸ்ஐஏவுடனான கூட்டு முயற்சியில் மற்றொரு விமான நிறுவனத்தை தொடங்கவிருப்பதன் மீதான தனது அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதைப் பற்றி கேட்கப்பட்ட போது, ஏர்ஏஷியா இந்தியாவில் உட்குழப்பம் ஏதும் இல்லை... இது போன்ற ஒரு விஷயத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. என்றார்.
அருண் பாட்டியா, டாடா-எஸ்ஐஏ கூட்டு முயற்சியை "நியாயமற்றது" என்றும் "இந்த தகவலைக் கேள்விப்பட்டு தான் மிகவும் அதிர்ச்சியுற்றதாகவும்" கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாடா குழுமம் இது பற்றி தன்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.