சென்னை: ஹெச்சிஎல் நிறுவனரான ஷிவ் நாடார் தமது கல்வி நிறுவன மேம்பாட்டுக்காக ரூ3 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
மக்களுக்கு சேவை சேவை செய்ய ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் என்னும் நிறுவனத்தை ஷிவ்நாடார் நிறுவி மக்களுக்கு சேவை செய்கிறார். அண்மையில் அந்நிறுவனத்தின் ஒரு முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர பணிகளுக்கு அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் ரூ.3,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த ரூ.3,000 கோடி ரூபாய் முதலீட்டில் வித்யா கியான் பள்ளிகள், எஸ்எஸ்என் கல்வி நிறுவனங்கள், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பள்ளி மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகமும் அடங்கும்.
முதலீடுகள் பற்றி விரிவாக ஷிவ் நாடார் கூறுகையில், முதலீட்டுச் செலவினத்தின் பெரும்பகுதி இரு வித்யாக்யான் பள்ளிகள் மற்றும் ஷிவ் நாடார் பள்ளிகளின் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக, ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு மட்டுமே வருடத்துக்கு சுமார் ரூ.300 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது என்றார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஷிவ் நாடாரின் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா கூறுகையில் இந்த நிறுவனத்தில் 2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை சுமார் 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், மேலும் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளோம் என்றார்.
புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளதான நிறுவனங்கள் சட்டத்தின் படி சிஎஸ்ஆர் செலவீட்டுக்கென 2 சதவீதம் கட்டாயமாக ஒதுக்கப்படவேண்டும் என்ற நெறிமுறையை வரவேற்கிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது நான் தனிப்பட்ட முறையில் அதனை வரவேற்கிறேன் என்று ஷிவ் நாடார் கூறினார்.