மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி, தங்க முதலீடுகளுக்கு மாற்றாக, பணவீக்கம் சார்ந்த அதிக ரிட்டர்ன்களை அள்ளித் தரக்கூடிய வழங்கக்கூடியதான, 10-வருட கால சேமிப்புத் திட்டம் ஒன்றை சிறு முதலீட்டாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
"சில்லறை முதலீட்டாளர்களுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள, பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, தேசிய சேமிப்பு ஆவணங்களை (ஐஐஎன்எஸ்எஸ் -கள்), அரசுடன் ஆலோசித்த பின், 2013 ஆம் ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று ஆர்பிஐ இன்று நடைபெற்ற அதன் 2013-14 வருடத்துக்கான பணக்கொள்கையின் இரண்டாவது காலாண்டு மறுசீராய்வின் போது தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சில்லறை முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கக் கூடியதான இந்த ஆவணங்கள் புதிய (கூட்டான) நுகர்வோர் விலை இன்டெக்ஸுடன் (சிபிஐ) இணக்கப்படும். இந்த ஆவணங்களின் மீதான வட்டித் தொகை ஒரு நிலையான விகிதத்துடன் சேர்த்து பணவீக்கத்தையும் கொண்டிருக்கும்.
"வட்டித்தொகை அரையாண்டிற்கு ஒருமுறை, மீட்பின் போது ஒன்று சேர்க்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும். இந்த ஆவணங்கள் வங்கிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களை சென்றடையும்." என்று ஆர்பிஐ கூறியுள்ளது. தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள், அறக்கட்டளைகள் மற்றும் சேவை நிறுவனங்கள் போன்றோர் இதில் முதலீடு செய்யலாம். 2013-14 ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், பணவீக்கத்திலிருந்து மக்களின் சேமிப்பை பாதுகாத்து, தனிநபர்கள் தங்கத்தில் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் போது ஏற்பட்ட வரலாறு காணாத நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருந்த தங்க இறக்குமதிகளின் மீது அரசாங்கம் மற்றும் ஆர்பிஐ ஆகிய இருதரப்பும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். ஆர்பிஐ-.யின், மற்றொரு தீர்மானத்தின் படி, சேமிப்பு மற்றும் டெர்ம் டெபாசிட்கள் மீதான வட்டித்தொகையை காலாண்டுக்கும் குறைவான இடைவெளிகளில் வழங்க வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. தற்சமயம், வங்கிகள் இத்தகைய டெபாசிட்கள் மீதான வட்டித் தொகையை காலாண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட இடைவெளிகளில் வழங்கி வருகின்றன.