சென்னை: இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 13.47 விழுக்காட்டை எட்டி தொடர்ந்து நான்காவது மாதமாக இரண்டிலக்க விழுக்காட்டு வளர்ச்சியில் பயணித்துள்ளது. நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி நிலையில், இது ஒரு நல்ல திருப்புமுனையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விழாக்காலங்களையொட்டி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பினை ஈடு செய்யுமளவிற்கு இந்த ஏற்றுமதி மதிப்பு வலுவானதாக இல்லை.
இதன் காரணமாக வர்த்தகப்பற்றாக்குறை அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட அரசு விவரங்களின்படி வர்த்தகப் பற்றக்குறையானது கடந்த இரண்டாண்டுகளிலேயே குறைந்து, செப்டம்பர் மாதத்தில் 670 கோடி டாலர் அளவிலிருந்து அக்டோபர் மாதம் 1056 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அளவு 80 கோடி டாலர் என்ற அளவிலிருந்து 137 கோடி டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக அந்த விவரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட அளவான 325 பில்லியன் கோடி டாலர் ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டமுடியும் என்று அரசு நம்புவதாக வர்த்தக செயலர் திரு எஸ் ஆர் ராவ் திங்களன்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பெருகிவரும் நடப்பு பற்றாக்குறை அல்லது அந்நிய செலவாணி வரவுகளை மிஞ்சிய செலவுகள், தங்க இறக்குமதி மீதான தடைகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாகவும், பற்றாக்குறை அளவை 60 பில்லியன் டாலர் என்ற அளவுக்குள் வைத்திருப்பதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் தங்க இறக்குமதி உயர்ந்திருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட பற்றாக்குறை அளவான 60 பில்லியன் டாலர் என்ற அளவுக்குள் நடப்புப்பற்றாக்குறையை அரசு வைத்திருக்க முடியும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதிகாரபூர்வ தங்க இறக்குமதி அளவுகள் அரசின் நடவடிக்கைகளினால் குறைய தொடங்கியுள்ளது.