சென்னை: கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 67.4 விழுக்காடு சரிவடைந்துள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ருபாய் 17.93 கோடியை லாபமாக ஈட்டிய அவ்வங்கி தற்பொழுது ருபாய் 5.85 கோடி ருபாய் மட்டுமே ஈட்டியுள்ளது. வராக்கடன் நிதியை அதிகரித்ததே இதற்கு காரணம் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 12.5 விழுக்காடு அதிகரித்து ரூபாய் 536.76 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வருமானம் ரூபாய் 477.01 கோடியாக இருந்தது என அவ்வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மொத்த பயன்தரா சொத்துக்களின் (NPA) மதிப்பு 4.5 விழுக்கட்டிலிருந்து 5.22 விழுக்காடாக உயர்ந்தது. பயன்தரா சொத்துக்களின் நிகர மதிப்பு 2.95 விழுக்காட்டிலிருந்து 3.77 விழுக்காடாக உயர்ந்ததுள்ளது.
அத்தியாவசிய முதல் இருப்பு விகிதம் பசேல்-2 விதிமுறைகள் படி 11.29 விழுக்காடாக இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் அரையாண்டு காலத்தில் ரூபாய்.31.20 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. கடந்த ஆண்டு இதே அரையாண்டில் நிகர லாபம் ரூபாய்.43.16 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வைப்புத்தொகைகள் ரூபாய் 14,639 கோடியிலிருந்து 12.41 விழுக்காடு உயர்ந்து ரூபாய்.16,455 கோடியாக பதிவானது.