மும்பை: அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக தங்க நாணயங்களை விற்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் திடீரென ரத்து செய்துள்ளது.
வர்த்தக வங்கிகளின் தங்க நாணய விற்பனையை தடை செய்து கொண்டிருக்கும் சூழலில் தங்க நாணய விற்பனையை தன் கையில் எடுத்துக் கொள்ள முனைந்தது அஞ்சலகத் துறை. ஆனால் நிதி அமைச்சகமோ இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
பாரத பெண்கள் வங்கியின் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சுமார் 58 பில்லியன் டாலர் மதிப்பிலான 850 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம். நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 4.8% என்ற வரலாறு காணாத அளவை எட்டச் செய்ததில் இதுவே கணிசமான பங்கை வகித்துள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரையிலான தங்க இறக்குமதி 800 டன்னாக சரிவடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம் தங்க இறக்குமதிகளை கட்டுக்குள் கொண்டு வர அரசு முனைந்துள்ளது.
மேலும் தங்க நாணயங்கள் இறக்குமதிகளையும் அரசு தடை செய்துள்ளது. தங்க நாணயங்களை வங்கிகள் விற்பதற்கும் ஆகஸ்ட் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது. தற்போது அஞ்சலகங்களில் தங்க நாணயங்களின் விற்பனைக்கான ஒப்பந்தம் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.