மும்பை: ‘சூப்பர்-ரிச் டாக்ஸ்' என்ற பெயரில் பணக்காரர்களிடம் (அதவது 10 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள்) 35 சதவீத விசேஷ வரியை வசூலிப்பதற்கு வைத்திருந்த திட்டத்தை அரசாங்கம் கைவிடப்போவதாக பிஸினஸ் ஸ்டாண்டர்டு கட்டுரை ஒன்று கூறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பு, ‘டைரக்ட் டாக்ஸ் கோட் பில்'(நேரடி வரி விதிப்பு நெறிமுறைமை மசோதா) பற்றிய கேபினட் ஆலோசனை கூட்டத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
எப்படியும் அடுத்த பொதுத்தேர்தல் வரும் வரை இந்த திட்டத்தை கிடப்பில் போடப்படும் என்றும் பிஸினஸ் ஸ்டாண்டர்டு கட்டுரை கூறுகிறது.
50 ஆண்டு கால பழமையை உடைய சட்டங்களை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ‘நேரடி வரி விதிப்பு நெறிமுறைமை மசோதா' கடந்த நான்கு ஆண்டுகளாக அமைச்சரவை ஒப்புதலுக்கு காத்துக்கிடப்பது குறிப்பிடத்தக்கது. சொத்துவரிக்கான உச்சவரம்பை தற்போதுள்ள 15 லட்சம் ரூபாயிலிருந்து 50 கோடி ரூபாயாக உயர்த்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிற்கு 0.25 சதவீதம் வசூலிக்கப்படுவது அமலில் உள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மேலதிக வரி போடும்போது அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்று கூறுகின்றனர். ஏனெனில் ஏற்கனவே 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் கூடுதல் கட்டணம் எல்லாம் சேர்த்து 33 சதவீதம் வரியாக கட்டுகின்றனர் என்பது நிபுணர்களின் விளக்கம்.