மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் கடந்த வாரம் 3 சதவீதம் உயர்வை எட்டியுள்ளது. இதன் தாய் நிறுவனமான ‘டெயில் விண்ட்ஸ்' தன்னிடமிருந்த 7.89 சதவீத பங்கு இருப்பை விற்றதே இதற்கு காரணம். அந்த பங்குகளின் மொத்த மதிப்பு 211 கோடி ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடதக்கது.
மும்பை பங்குச்சந்தையில், முந்தைய நாளில் இருந்ததைவிட 4.36 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் மதிப்பு ரூ.320.55 என்ற அளவில் இருந்து ரூ.323.95 என்ற அளவிற்கு உயர்ந்தது. நிப்டியில் நிறுவன பங்கின் மதிப்பு 2.90 சதவீதம் உயர்ந்து ரூ.321 என்ற அளவில் நின்றது.
அக்டோபர் 3ம் தேதி ஜெட் ஏர்வேஸ் பங்குகள் மொத்தமாக 4.25 சதவீதம் உயர்ந்தன.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை உருவாக்கிய ‘டெயில் விண்ட்ஸ்' தன்வசம் இருந்த 7.89 சதவீத பங்கு இருப்பை வெளிச் சந்தையில் இறக்கி 211 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது.
எடிஹாட் ஏர்லைன்ஸ்
நரேஷ் கோயல் தலைமையில் இயங்கும் இந்த குழுமம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்கு இருப்பை பிரபல ‘எடிஹாட் ஏர்லைன்ஸ்' நிறுவனம் முதலீடு செய்வதற்கு வசதியாக இந்த விற்பனையை செயல்படுத்தியிருக்கிறது.
ரூ.211.41 கோடி மதிப்புடைய பங்குகள்
‘டெயில் விண்ட்ஸ்' குழுமம் மொத்தமாக 6,815,843 பங்குகளை - அதாவது 7.89 சதவீத பங்கு இருப்பு கொண்டு தலா ரூ.310.15 என்ற விலைக்கு விற்றிருக்கிறது. இந்த விற்பனையின் பணமாற்ற மதிப்பு ரூ.211.41 கோடி ஆகும்.
சிசிஐ அனுமதி
கடந்த வாரம் இந்தியாவின் ‘ஃபேர் டிரேட் ரெகுலேட்டர்' ஏஜன்சியான CCI அமைப்பு எடிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்கு இருப்பை வாங்குவதற்கான அனுமதியை அளித்திருக்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
அத்துடன், மற்றொரு வெளிச்சந்தை விற்பனையில் ‘மெரில் லின்ச் கேபிடல் மார்க்கெட்ஸ் எஸ்பானா' அமைப்பு ஜெட் ஏர்வேய்ஸின் 29 லட்சம் பங்குகளை (3.35 சதவீத இருப்பு) 90 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. மேலும், ‘டாச்சிஸ் செக்யூரிட்டீஸ் மொரிஷியஸ்' குழுமம் 12.60 லட்சம் பங்குகளை (1.39 சதவீத பங்கு இருப்பு) 39 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த இரண்டு வெளிநாட்டு நிறுவன அமைப்புகளும் ஒரு பங்கிற்கு ரூ.310 என்ற மதிப்பில் வாங்கியிருக்கின்றன.